Thursday, February 27, 2014

சிவபுராணம் கூறும் வில்வ மகிமை


வில்வ இலை ரொம்பவே உயர்வானது. வில்வத்தோட பெருமைகளைப் பற்றி சிவபுராணம் விரிவாக சொல்லி உள்ளது. வில்வமரத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள்.
ஒரு வில்வ மலரானது ஒரு லட்சம் தங்க புஷ்பங்களுக்கு இணையானது என்று சொல்லியிருக்கிறார்கள். 

அப்படி என்றால் அதோட சிறப்பு உங்களுக்குப் புரியுமே. அதைத் தவிர ஒரு வில்வ மரத்தை வீட்டுல வளர்த்தால் அஸ்வமேத யாகம் செஞ்ச பலனும், ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலனும், கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலனும் உலகில் உள்ள அத்தனை சிவாலயங்களைத் தரிசித்த பலனும் கிடைக்கும். 

அதைத் தவிர வில்வத்துக்கு மட்டுமே உள்ள தனிச் சிறப்பு அதற்கு நிர்மால்ய தோஷம் கிடையாது. அதைப் பறித்து எத்தனை நாள்கள் ஆனாலும் உலர்ந்து போனாலும் கூட பூஜைக்குப் பயன்படுத்தலாம். மற்ற மலர்களையோ இலைகளையோ அந்த மாதிரிப் பயன்படுத்தக் கூடாது. இது வில்வத்துக்கு மட்டுமே உள்ள தனிச் சிறப்பு.


Wednesday, February 26, 2014

பல்வேறு நன்மைகளை அள்ளித்தரும் மகாசிவராத்திரி

பெண்கள் அம்மனை ஒன்பது நாட்கள் வழிபடுவது நவராத்திரி. இதேபோல் ஆண்கள் சிவனை பூஜிக்கும் நாள் சிவராத்திரி. இந்த சிவராத்திரி பற்றி பல புராண கதைகள் உள்ளன.


சிலவற்றைப் பார்ப்போம். பிரளய காலத்தின்போது பிரம்மனும், அவர் படைத்த ஜீவராசிகளும் அழிந்தநிலையில், இரவில் அம்பிகை உமாதேவி, சிவனை நினைத்து பூஜை செய்தாள். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள். பூஜை முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூசித்த இந்த இரவை, தேவர்களும் மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே அதாவது `சிவராத்திரி‘ என்றே  கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள்.

மாசிமாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாலேயே இந்த நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை தங்களை (சிவனை)ப் பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் கொடுத்து முடிவில் மோட்சமும் பெற அருள் புரியுங்கள் என்று அம்பிகை வேண்டினாள். சிவபெருமானும், அதற்கு இசைந்தார் அதுவே சிவராத்திரி. ஒரு சமயம் சிவனின் கண்களை விளையாட்டாகப் பொத்தினாள் அம்பிகை உமாதேவி. அதனால் சகல உலகங்களும் இருளில் மூழ்கின.

அந்தப் பாவம் நீங்க தவம் மேற்கொண்டாள், மேலும் சிவ னை இரவேல்லாம் உமாதேவி தேவிகாபுரத்தில் பூஜித்த நாள் சிவராத்திரி. பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்று அகந்தை ஏற்பட்டபோது, சிவபெருமான் தனது அடி, முடி காண அவ்விருவருக்கும் கட்டளை இட்டார். அடி முடி காணமுடியாமல் அவர்கள் தோல்வியுற்றனர். அவர்கள் அகந்தை அழிந்தது. அப்போது சிவபெருமான் நெருப்பு உருவாய் மாறி அவர்களுக்கு காட்சியளித்து  திருவண்ணா மலையாக மாறியநாள் சிவராத்திரி. மார்க்கண்டேயனை எமனிடமிருந்து சிவன் காத்த நாள் சிவராத்திரி. அந்த நிகழ்வு நடந்த இடம் திருக்கடையூர்.  இவ்வாறு புராணங்களில் சிவராத்திரி குறித்து பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன.

சிவனை வழிபடும் முறை :

சிவராத்திரியன்று நான்கு காலங்களிலும் சிவனுக்கு பஞ்ச வில்வங்களால் பஞ்சமுக அர்ச்சனை செய்ய வேண்டும். இயலாதவர்கள் நான்காம் காலத்திலாவது பஞ்சமுக தீப அர்ச்சனை செய்து, ஐந்து வகையான அன்னங்களை இறைவனுக்கு நிவேதிக்க வேண்டும். அன்று தானதர்மங்கள் செய்வது மிகவும் சிறந்தது.

திங்கட்கிழமை ஸ்பெஷல் :

சிவராத்திரி திங்கட்கிழமையில் அமைவது மிகவும் விசேஷம். இதை ‘லோக சிவராத்திரி‘ என்பர். அன்று விரதமிருந்து சிவ வழிபாட்டில் கலந்துகொண்டு, இரவு  முழுவதும் அபிஷேக ஆராதனைகளை செய்தால் புண்ணியத்தின்மேல் புண்ணியம் சேரும்.

சிவராத்திரியின் மகிமையைக் கூறும் திருத்தலங்கள் 

திருக்கண்டியூர், திருக்கோவிலூர், திருவதிகை, திருப்பறியலூர், திருவிற்குடி, திருவழுவூர், திருக்குறுக்கை, திருக்கடவூர் ஆகிய திருத்தலங்களுடன் பன்னிரண்டு  ஜோதிர்லிங்கத் தலங்களும்; திருவண்ணாமலை, திருவானைக்கா, ஓமாம்புலியூர், திருக்கழுக்குன்றம், திருக்கோகர்ணம், திருப்பனந்தாள், நாகப்பட்டினம்,  கஞ்சனூர், திருவைகாவூர் ஆகிய திருத்தலங்களிலும் சிவராத்திரி போற்றப்படுகிறது.

சிவராத்திரி விழா 

அடையார், முதல் அவென்யூ, சாஸ்திரி நகரில் உள்ள சீனிவாச பெருமாள் ஆலயத்தில் வரும் 27ம் தேதி, சிவராத்திரி விழா நடைபெற உள்ளது.

நிகழ்ச்சிகள் விபரம் :
  • வரும் 26ம் தேதியன்று மாலை 108 சங்கு அபிஷேக நிகழ்ச்சி.
  • 27ம் தேதி காலை நவகலச அபிஷேகம் மாலை 5மணிக்கு பிரதோஷம் இரவு 8மணிக்கு முதல் கால அபிஷேகம். இரவு 11 மணிக்கு இரண்டாம் கால  அபிஷேகம்.
  • 28ம் தேதி விடியற்காலை 2 மணிக்கு மூன்றாம் கால அபிஷேகம் காலை 4மணிக்கு நான்காம் கால அபிஷேகம்.

Saturday, February 8, 2014

ஊனங்களைப் போக்கி நல்வாழ்வு தரும் அங்குரேஸ்வரர்

ஆதிகுடி எனும் இத்தலத்தில் மாடு மேய்ப்பாளன் ஒருவன் வசித்து வந்தான். அவனுக்குப் பிறவியிலேயே ஒரு கை, கால் ஊனமாக இருந்தன. ஒரு நாள் அவன் ஓட்டிச் சென்ற கூட்டத்திலிருந்த பசுக்களில் ஒன்று, ஓரிடத்தில் தானாக பால் சொரிந்து கொண்டிருப் பதைக் கண்டான்.
அங்கே ஏதோ விஷயம் இருக்கிறது என்பதை உணர்ந்த அவன், தன் கையில் இருந்த மண் வெட்டியால் தரையை வெட்டினான். அந்தப் பகுதியிலிருந்து செங்குருதி பீறிட்டது. அதைக் கண்டு திகைத்துப் போனான் அவன். பிறகு சுயநினைவுக்கு வந்து, ஊருக்குள் ஓடி மக்களிடம் தான் கண்ட அதிசயத்தைக் கூறினான்.

மக்கள் அவனை மிகவும் அதிசயமாகப் பார்த்தனர். ஆமாம், ஒரு கால், ஒரு கை ஊனமாகவே அவனைப் பார்த்திருந்த ஊரார் இப்போது அவன்  ஊனம் நீங்கி ஓடோடி வந்தால் அது அதிசயம்தானே! பிறகு, சம்பவம் நடந்ததாக அவன் கூறிய இடத்திற்குச் சென்றனர். அவன் கூறிய இடத்தில்  தோண்டிப் பார்த்தனர்.
அங்கு அழகிய லிங்கம் ஒன்று தென்பட்டது. அதை அங்கேயே பிரதிஷ்டை செய்து, அப்போதைய சோழ மன்னனால் அந்த இடத்தில் ஒரு ஆலயம்  கட்டப்பட்டது. அங்குரம் எனச் சொல்லப்படும் மண்வெட்டியால் தோண்டியபோது வந்த லிங்கம் என்பதால் இறைவனுக்கு ‘அங்குரேஸ்வரர்’ என்ற  பெயரே வழங்கலாயிற்று.

இங்குள்ள வாய்க்காலுக்கு கமல காசி தீர்த்தம் என்று பெயர். காசிக்கு இணையான, நீத்தார் கடன் நிறைவேற்ற உகந்த  தலம் இது. தினசரி இரண்டு கால பூஜை நடக்கும் இத்தலத்து இறைவனுக்கு ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிஷேகம் மிகச் சிறப்பாக  நடைபெறுகிறது. சனீஸ்வரர் ஈஸ்வர பட்டம் பெறுவதற்கு முன்பே இங்கு வந்தார். சனீஸ்வரர் எம தண்டத்தினால் தாக்கப்பட்டு கால் ஊனமானார். அந்த நிலையிலேயே சனிபகவான் மானுட வடிவில் பல சிவாலயங்களுக்குச் சென்று, வழிபட்டு தீர்த்த நீராடல்களை மேற்கொண்டு புனிதமான ஆதிகுடி தலத்திற்கு வந்தார்.

இங்கு பல காலம் தவமிருந்து வரங்களைப் பெற்றார். இந்த ஆலயத்தில் உள்ள விமல லிங்கத் திருமேனியை சனிபகவான் சூட்சும வடிவில் வழிபட்டு ஊனம் நீங்கப் பெற்றார். இப்போதும் சனிபகவான் அப்படி வழிபட்டுக் கொண்டிருப்பதாக ஐதீகம். எனவே, இங்கு விமல லிங்க வழிபாட்டையே சனீஸ்வர வழிபாடாகவும் பக்தர்கள் கருதுகின்றனர். செவ்வாய், சனிக்கிழமைகளில் விமல லிங்கத்திற்கு தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய் மற்றும் எட்டு வகையான மூலிகை காப்பு இட்டு பூஜை செய்து, வெண்கலப் பானையில் பால், பொங்கல் படைத்து, முழு வாழை இலையில் தானம் அளித்து,  அந்த வெண்கலப் பானையை தானம் தந்தால் அனைத்துவித நோய்களிலிருந்தும் குணம் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

விபத்தால் அங்க வலிமை இழந்திருந்தால், பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் இங்குள்ள விமல லிங்கத்திற்கு வெண்ணெய் காப்பும், அதன்மேல் நிறைய மாதுளை முத்துகளைப் பதித்தும் வழிபட்டால் குணம் நிச்சயம் என்கிறார்கள். ஆலயம் தென் திசை நோக்கி அமைந்துள்ளது. இறைவன் பெயர் அங்குரேஸ்வரர். இறைவி, பிரேமாம்பிகை. ஆலய முகப்பைத் தாண்டியதும் பிராகாரமும் நடுவே நந்தியப் பெருமானின் திருமேனியும் உள்ளன. அடுத்துள்ள மகாமண்டபத்தில் நுழைந்தால் எதிரே அன்னையின் சந்நதியும் இடதுபுறம் இறைவனின் சந்நதியும் உள்ளன.

இறைவனின் அர்த்த மண்டப நுழைவாயிலில் இடதுபுறம்  பிள்ளையாரும், வலதுபுறம் முருகனின் திருமேனியும் அருள்பாலிக்க, கருவறையில் இறைவன் சுயம்பு மூர்த்தியாய், லிங்கத் திருமேனியில் கிழக்கு திசை நோக்கி அருள் புரிகிறார். அன்னை பிரேமாம்பிகை தென்திசை நோக்கி நின்ற கோலத்தில் தரிசனம் தருகிறாள். கோஷ்டத்தில் தென்புறம் தட்சிணாமூர்த்தியும், கிழக்கில் மகாவிஷ்ணுவும், வடக்கில் துர்க்கையும் காட்சியளிக்கிறார்கள். பிராகாரத்தில் தெற்கில்  பெரிய வடிவாக விமல லிங்கம் காணப்படுகிறது. ஆலயத்தில நுழைந்தவுடன் முதலில் கண்களைக் கவருவதும் இந்த விமல லிங்கம்தான்.

கிழக்குத் திருச்சுற்றில் மகா கணபதி, சண்முகநாதர்-வள்ளி-தெய்வானை, மகாலட்சுமி, வடக்கில்  சண்டிகேஸ்வரர் ஆகியோர் உள்ளனர். வடகிழக்கு மூலையில் நவகிரக நாயகர்கள். ஆலய தலமரம், வன்னிமரம். இந்த ஆலயத்திற்கு எதிரே மயானம் உள்ளது. தமிழ்நாட்டில் ஸ்ரீவாஞ்சியம் மற்றும் ஆதிகுடியான இத்தலம் இரண்டிற்கு எதிரே மட்டும்தான் இப்படி மயானம் அமைந்துள்ளதாக கூறுகின்றனர். முதலாம் பராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்ட இந்த ஆலயம் பல நூற்றாண்டுகளைக் கடந்து கம்பீரமாகத் திகழ்கிறது.

மாடு மேய்ப்பவன் மேல் கருணை கொண்டு அவனது பிறவி ஊனத்தை குணமாக்கிய இத்தலத்து இறைவன், தன்னை ஆராதிக்கும் பக்தர்களின் மன  ஊனத்தையும் சேர்த்து குணமாக்கி அருள்புரிகிறார். திருச்சி மாவட்டம் லால்குடி -அன்பில் பேருந்துப் பாதையில் லால்குடியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

Monday, February 3, 2014

மனதில் உண்டாகும் குழப்பங்களை தீர்த்து வைக்கும் மாயவன்

குருக்ஷேத்திர யுத்தம் மிகவும் உக்கிரமாய் நடந்துகொண்டிருந்தது. பஞ்ச பாண்டவர்களுக்கு நண்பனாய், தத்துவஞானியாய், சிறந்ததொரு வழிகாட்டியாக செயல்பட்டார் பகவான், கிருஷ்ணன்.
எதிரிகளை வெல்வதற்கு நேரடிப் போர் தவிர தந்திர சூழ்ச்சிகளும் அவசியம் என்று அவர்களுக்கு உணர்த்தினார். ‘நியாயங்களைப் புறந்தள்ளிய வர்களை, தர்மத்தை காலடியில் போட்டு மிதித்தவர்களை, கபட நாடகமாடி ஆரம்பகால வெற்றிகளை அநியாயமாகப் பெற்றவர்களை, வஞ்சனையையே வாழ்வாதாரமாகக் கொண்டவர்களை அவர்கள் போக்கிலேயே போய் வீழ்த்துவதும் தர்மம் சார்ந்ததுதான் என்பது கிருஷ்ணனின் வாதம்.

அதற்கு பாண்டவர்கள் உடன்படவில்லை என்பதுதான் ஆச்சர்யம் -குறிப்பாக தர்மர். பொய் கூட அல்ல; மெய்யைப் பொய்யாகச் சொல்லும்படி கிருஷ்ணன் அறிவுறுத்தியதையும் அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதுவும் தங்கள் குரு துரோணாச்சார்யாரைக் கொல்வதற்காக இப்படி ஒரு உத்தியைக் கையாள்வது மிகக் கேவலமானது என்று அவர் கருதினார். ‘‘சூதாடுவது மட்டும் தர்மச் செயலா?’’ கிருஷ்ணன் கேட்டார். ‘‘வீர விளையாட்டுகளில் அர்ஜுனனும், பீமனும் துரியோதனாதியர்களைப் பின்னுக்குத் தள்ளி வெற்றிவாகை சூடினார்களே, அந்த நேர்மை உன் சூதாட்டத்தில் இருந்ததா?

தாயம் எப்படி வேண்டுமானாலும் விழும் என்ற ஊகத்தில், நிச்சயமில்லாத வெற்றியை எதிர்பார்த்து விளையாடும் அந்த சூதாட்டம் நாணயமானதா? பணயம் வைத்துப் பந்தயம் ஆடுவது என்று ஆரம்பித்துவிட்டால், எதிரியின்  சொத்துகளை யெல்லாம் தாயத்தாலேயே கைப்பற்றிவிட வேண்டும் என்ற உன் எதிர்பார்ப்பு நியாயமானது தானா? உன்னுடைய உடைமைகள் என்றில்லாமல்,  தத்தமக்கு என்று தனித்தனி வாழ்வமைத்துக் கொள்ளும் உரிமை பெற்றிருந்த தம்பிகளையும் பணயம் வைக்க உனக்கு யார் அதிகாரம் கொடுத்தது? ‘அண்ணன்’  என்ற உறவுக்கு அவர்கள் காட்டிய அபிரிமிதமான பாசத்துக்கு நீ செலுத்திய நன்றிக்கடனா இது?

உன்னோடு தம்பிகளையும் வைத்து இழந்துவிட்ட நீ, அப்போது உங்களுக்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாதபடி தனித்துவிடப்பட்ட திரௌபதியையும் பணயம் வைக்க மனு தர்மம் இடம் கொடுத்ததா என்ன?’’ தர்மரால் பதில் எதுவும் பேச இயலவில்லை. நாமறியாமலேயே எத்தனையோ அதர்மங்களுக்குத் துணை போயாயிற்று. அதனால் இப்போதும் சந்தர்ப்ப சூழ்நிலையை அனுசரித்து நடந்துகொள்ள வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்தார். இத்தனைக்கும் கிருஷ்ணன், அவர் பொய் சொல்ல வேண்டும் என்று வற்புறுத்தவில்லை. உண்மையை, குரலில் ஏற்றத் தாழ்வுடன் வெளிப்படுத்த வேண்டும் என்றுதான் கேட்டுக்கொண்டார்.

போரில் அசுவத்தாமா என்ற யானையைக் கொல்வது; அதை தர்மர், உரத்த குரலில் ‘அசுவத்தாமா...’ என்று ஆரம்பித்து, மிக மெல்லிய குரலில் ‘என்ற யானை...’ என்று தொடர்ந்து, பிறகு மீண்டும் உரத்தக் குரலில் ‘இறந்துவிட்டான்!’ என்று சொல்வது என்று திட்டம் வகுத்தார் பகவான். இப்போது, இந்த யுத்தக் களத்தில் பொய் சொல்ல விரும்பாத தர்மர் உண்மையைத்தான் சொல்லப்போகிறார்; அதுவும் வார்த்தைகளில் ஒலி ஏற்றத்தாழ்வுடன் சொல்லப் போகிறார், அவ்வளவுதான். இப்போதும் அரை மனதுடன்தான் தர்மர் அந்த தந்திரத்தை செயல்படுத்த தானும் உடந்தையாக இருக்க சம்மதித்தார்.

ஏன் அரை மனது? துரோணாச்சார்யாரின் மகன் பெயரும் அசுவத்தாமன்தான். ‘அசுவத்தாமன்..........இறந்துவிட்டான்,’ என்ற தகவலை அவர் கேட்க நேர்ந்தால், மனம் நொந்தே தன் உயிரை விட்டுவிடுவார் என்பதுதான் கிருஷ்ணனின் எதிர்பார்ப்பு. அவரை மாய்த்துவிட்டால், பிறகு துரியோதனர்களைப் போரில் வழிநடத்தச் சரியான ஆசான் இல்லாமல் போய்விடும் என்பதால், அவர்களை எளிதாக வென்றுவிடலாம்! ‘அசுவத்தாமா இறந்தது; ஆனால், அசுவத் தாமன் இறக்கவில்லை. இந்தக் குழப்பத்தைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் கிருஷ்ணரின் திட்டம் தர்மருக்கு முழுமையாக ஏற்புடையதல்ல.

‘‘உன்னுடைய நல்ல மனத்தால், அந்த பலவீனத்தால், நீயும், உன் தமையன் மார்களும், உன் மனைவியும், உன் தாயும்  ஏமாந்தது போதும், இனியாவது அதற்குப் பழிக்குப் பழி வாங்கிக்கொள்,’’ என்று கிருஷ்ணன் மேலும் ஊக்குவித்தார். வேறு வழியில்லை. தர்மர் உடன்பட்டார். எதிர்பார்த்ததுபோலவே, தன் மகன்தான் போரில் கொல்லப்பட்டான், அதுவும் தர்மர் வாயாலேயே கேட்க நேர்ந்தது  என்றால் அது நிச்சயம் உண்மைதான் என்று நம்பிய துரோணாச்சார்யார் அப்படியே ஒடுங்கிப்போய் மயங்கிச் சாய்ந்தார். அப்போது பாண்டவர் பக்கத்திலிருந்து திருஷ்டதுய்மன் பாணம் வீச, அவர் உயிர் நீத்தார்.

இந்தச் சம்பவம் தர்மரை வெகுவாக பாதித்தது. அதர்மத்துக்கு அதர்மம்தான் சரியா என்று பலமுறை கிருஷ்ணனைக் கேட்டுக் கேட்டு மாய்ந்துபோனார். யுத்தத்தில் துரியோதனாதியர்கள் மடிய, பாண்டவர்கள் தம் நாட்டை மீட்டுக்கொண்டார்கள். இழந்த சொத்துகள் மீண்டன; ஆனால் இழந்த மனஅமைதி திரும்புமா? ஒரு பொய்யால் தமக்கு வில்வித்தை கற்பித்த ஆசானையே கொன்றுவிட்ட தனக்குப் பிராயசித்தம் உண்டா? தவித்தார் தர்மர். க்ஷேத்திராடனம் புறப்பட்டார். பல தலங்களைத் தரிசித்த அவர், இந்த திருச்செங்குன்றூர் தலத்துக்கு வந்தபோது, மனம், மிகவும் அமைதியாவதை உணர்ந்தார்.

தன் தோஷத்துக்குப் பிராயசித் தம் இங்கே தனக்கு அனுக்ரகிக்கப்படுவது அவருக்குப் புரிந்தது. பகவான் கிருஷ்ணனே, இங்கே இமையவர் அப்பனாகக் காட்சி அளிக்க, அப்படியே நெகிழ்ந்து போனார் தர்மர். அதோடு உடனே, அங்கேயே, அர்ச்சாவதாரமாகக் காட்சியளித்தப் பெருமாளுக்கு ஒரு கோயில் உருவாக்கினார். அந்தக் கோயில்தான்  இப்போது நாம் தரிசிக்கும் திருச்செங்குன்றூர் திவ்யதேசம். இதனை ‘தர்மர் அம்பலம்’ என்றழைக்கிறார்கள். இந்தத் தலத்தில்தான், இந்தப் பெருமாள்தான், முருகப் பெருமானுக்கும் சூரபத்மனைக் கொல்லும் ஆற்றலை அளித்திருக்கிறார் என்கிறது இன்னொரு புராணத் தகவல்.

அது என்ன? சூரபத்மன், சிவபெருமானால் பல வரங்கள் அருளப் பெற்றவன். அந்த ஆணவத்தில் அவன் தேவர்களைப் பெரிதும் இம்சிக்கத் தொடங்கினான். அவனால்  ஏற்பட்ட வேதனைகளைத் தாங்க இயலாத தேவர்கள், சிவபெருமானிடம் அழுது முறையிட்டார்கள். அவர்தானே வரம் கொடுத்தார், அதனால் அவருடைய சொல்லுக்கு அசுரன் கட்டுப்படுவான் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், அவரோ, அவனுடைய தவத்தைக் கண்டு மகிழ்ந்ததால் தான் அவனுடைய தகுதிக்கும் மீறிய வரங்களைக் கொடுத்துவிட்டதாகவும், அதனால் அவனால் தன்னைக் கட்டுப்படுத்த இயலாது என்றும், திருச்செங்குன்றூரில் கோயில் கொண்டிருக்கும் இமயவர் அப்பனைச் சரணடைந்து தொழுதால், அவர் நல்வழிக் காட்டுவார் என்றும் அவர்களை ஆற்றுப்படுத்தினார்.

உடனே தேவர்கள் இமயவர் அப்பனை அடைந்து நற்கதி வேண்டினார்கள். அவர்களுடைய குறைகளைக் கேட்ட பெருமாள், சிவபெருமான், சூரபத்மனுக்குக் கொடுத்திருக்கும் வரங்களையும் அறிந்துகொண்டார். அந்த வரங்களையும் மீறிய ஒரு சக்தியால்தான் அவனுடைய வதம் நிகழ வேண்டும் என்பதையும் தீர்மானித்துக்கொண்டார். பிறகு முருகப் பெருமானை அழைத்து அந்தப் பொறுப்பை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். முருகனும் தன்னிடமிருந்த வேற்படையால் சூரபத்மனையும் அவனுடைய அரக்கர் படைகளையும் வதைத்து ஒழித்தான்.

பல்வேறு வடிவங்களில் தோன்றி போரிட்ட சூரபத்மனை முருகன் ஒவ்வொன்றாக வெற்றிகண்ட நேர்த்தி கண்டு தேவர்களுடன் பெருமாளும் வியந்து மகிழ்ந்தார். இறுதியாக, ஒரு மாமரமாகத் தோன்றிய அரக்கனை இரண்டாகப் பிளந்து ஒன்றை சேவலாகவும், மற்றொன்றை மயிலாகவும் மாற்றி, அவ்விரண்டையுமே தன் கொடியாகவும், வாகனமாகவும் அமைத்துக்கொண்டான்.  இந்தப் பெருந்தன்மையையும் பாராட்டினார் பெருமாள். கேரளத்துப் பாரம்பரியத்தை விளக்கும் வட்டவடிவமான கருவறையினுள் இமையவர் அப்பன் கொலுவிருக்கிறார். தர்மரின் மன ஆறுதலுக்குக் காரணமான பெருமாள் இவர் என்றெண்ணும்போது, எத்தகைய மனக் குழப்பத்தையும் தீர்த்துவைக்கும் பிரகாசமும் மனதில் ஒளிர்கிறது.

மிகப் பெரிய வெளிப் பிராகாரம். பசுமை கொழிக்கும் இயற்கைச் சூழலுடன், மிக சுத்தமாக விளங்குகிறது கோயில் வளாகம். ஐயப்பன் தனிச் சந்நதி கொண்டு விளங்குகிறார். அவருக்குச் சற்று  அருகில் ஆவுடையுடன் கூடிய லிங்கம் அருள்பாலிக்கிறது. கோசாலை கிருஷ்ணனுக்கும் ஒரு சந்நதி. ஒரு பெரிய அரசமரத்துக்கு அடியில் மேடை கட்டியிருக்கிறார்கள். அந்த மரத்துக்கு பக்தர்கள் பூஜை செய்கிறார்கள். பக்கத்தில் திருச்சிற்றாறு ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தத் தலத்தின் இந்த தீர்த்தமானது சங்க தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசம் இது. அவர் பாடிப் பரவசப்பட்ட பத்துப் பாசுரங்களில் ஒன்றை இங்கே சுவைப்போம்:

வார்கடா அருவி யானை மாமலையின்
மருப்பு இணைக்குவடு இறுத்து உருட்டி
ஊர்கொள் திண்பாகன் உயிர் செகுத்து
                                      அரங்கின்
மல்லரைக் கொன்று சூழ்பரண்மேல்
போர்கடா அரசர் புறக்கிட மாட
மீமிசைக் கஞ்சனைத் தகர்த்த
சீர்கொள் சிற்றாயன் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறி எங்கள் செல்சார்வே

-‘குவலயாபீடம் என்ற மலைபோன்ற யானையின் அருவிபோலப் பொங்கிப் பெருகும் மதநீரையும் கண்டு மருளாது அதன் இரு தந்தங்களையும் பிடித்திழுத்து, முறித்து அந்த பேருரு யானையை வதம் செய்தவன், எம்பெருமான். அதுமட்டுமா, அரங்கில் நெடிதுயர்ந்த மல்லர்களையும் வீழ்த்தியவன். பரண் அமைத்துப் போரிட்ட அரசர்களையும் வெருண்டோட வைத்தவன். மண்டபத்தின் மேல் மாடத்தில் அமர்ந்திருந்த கம்சனை அழித்தவன். இத்தனையையும் ஓர் இடைச் சிறுவனாக, பால்ய பருவத்திலேயே நிகழ்த்தி அனைவரையும் திகைக்க வைத்தவன். அந்தப் பெருமான் உறையும், திருச்சிற்றாற்றங்கரை மீதமைந்த திருச்செங்குன்றூர் எனும் திவ்ய தேசமே நாமெல்லாம் சென்றடைய வேண்டிய இடம்,’ என்கிறார்.

தியான ஸ்லோகம்

திருச்செங்குன்றூர் சென்று இமையவர் அப்பனை தரிசிக்கும்வரை அவரது தியான ஸ்லோகத்தைச் சொல்லிக்கொண்டிருக்கலாம்:

ஸ்ரீ விஷ்ணுர் தேவதா தஸ்த் வருணஸரஸிஜா ரக்த நேத்ரஸ்தலேச:
பச்சாத் ஸ்ரீ சங்க தீர்தாச்ரய புவிசஜ கஜ்ஜியோதிரங்கே விமாநே
யோபாதி ஸ்வர்ண வல்ல்யாஸ ஹரிரநுதிநம் பாதுசித்தேமதியே
பச்சாத் வக்த்ரச்ச பஸ்மாஸுர தநுமதநா சக்த சம்போ: ப்ரஸந்ந:
                               (ஸ்ரீவிஷ்ணு ஸ்தல தர்சனம்)

பொதுப் பொருள்:  ‘ரக்த நேத்ரஸ்தலம்’ (செங்குருதிபோல சிவந்து திகழும் திருச்செங்கண்ணூர்) என்று கூறப்பெறும் திருச்செங்குன்றூர் என்னும் இத்திவ்யதேசத்தில் எழுந்தருளியிருக்கும் இமையவர் அப்பனே நமஸ்காரம். ஸ்வர்ணவல்லித் தாயாருடன், ஜகஜ்யோதி விமான நிழலில், சங்க தீர்த்தக் கரையில், மேற்கு நோக்கிய நின்ற திருக்கோலத்தில், முருகப் பெருமான் மூலமாக பஸ்மாசுரனை அழித்து, அவருக்கு நேரிலும் காட்சி கொடுத்து அருளிய எம்பெருமானே, நமஸ்காரம். இதே நிலையில் என்றைக்கும் என் உள்ளத்தில் தாங்கள் விளங்குவீர்களாக. திருவனந்தபுரம்-கொல்லம்-எர்ணாகுளம் பாதையில் செங்கணூர் ரயில் நிலையத்தில் இறங்கி, இக்கோயிலை அடையலாம்.