திருக்கயிலையில் சிவபெருமான், பார்வதி தேவியுடன் வீற்றிருந்தார். அப்போது தேவர்கள் அனைவரும் ஒன்று கூடி வந்து சூரபத்மன் போன்ற அசுரர்களால் தாங்கள்படும் இன்னல்களை சிவபெருமானிடம் கூறி முறையிட்டனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட சிவபெருமான் ஆறுதிருமுகங்களுடன் தோன்றினார்.
அவர் ஆறுமுகங்களாலும் பார்வதியை பார்த்ததும் அவரது ஆறு நெற்றிக் கண்ணில் இருந்தும் சூர்ய ஒளி பொருந்திய ஆறு உருவங்கள் வெளிபட்டன. அதைக்கண்டு பார்வதி பயந்து ஓடினாள். அப்போது ஆறு உருவங்களும் சிவபெருமானுக்கு எதிரில் அடக்கமாக நின்றன.
உடனே சிவபெருமானின், அக்னி, வாயுதேவர்களை அழைத்து "நீங்கள் இந்த தேஜசை கங்கை நதிக்கு எடுத்து சென்று அங்குள்ள நாணல் புதரின் மத்தியில் சேர்த்து விடுங்கள்'' என்று கட்டளையிட்டார். அவர்கள் கங்கையை அடைந்து அங்கு நாணற் காட்டின் மத்தியில் தாமரை மலர்களுக்கிடையில் அந்த சிவதேஜஸ்களை மிருதுவாக வைத்தார்கள்.
உடனே அந்த ஆறு தேஜஸ்களும் ஆறு அழகிய குழந்தைகளாக மாறின. திருமால் அந்த குழந்தைகளுக்கு கார்த்திகைப் பெண்களைக் கொண்டு பாலூட்டி சீராட்டி வளர்க்கச் செய்தார். சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து வெளிப்பட்ட தேஜசைக் கண்டு பயந்து பார்வதி ஓடிய போது கால் இடறியதில் அவள் அணிந்திருந்த நவரத்தினச்சரம் அறுந்து ஒன்பது மணிகள் சிதறின.
அந்த ரத்தினங்களில் இருந்து ஒன்பது காளிகாஸ்திரீகள் தோன்றி அவர்கள் மூலமாக வீரபாகு முதலான வீரர்கள் பிறந்தார்கள். சிவபெருமான் அவர்களை நோக்கி "நவ வீரர்களே, பார்வதி மைந்தனாகிய முருகனுக்குப் பணி செய்து வாருங்கள்'' என்று கூறினார்.
கங்கைப் பொய்கையில் கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டு வரும் குழந்தைகளைப் பார்க்க பார்வதிதேவி வந்தாள். ஆறு குழந்தைகளையும் அவள் தன் நெஞ்சோடு சேர்த்து அனைத்ததும் ஆறு குழந்தைகளும் ஒரே குழந்தையாயின. அப்போது முருகன் இரண்டு கால்கள், பன்னிரண்டு தோள்கள், பதினெட்டு கண்கள் கொண்ட தோற்றத்தில் விளங்கினார்.
No comments:
Post a Comment