Sunday, May 25, 2014

வாழ்கை சுழற்சி – பட்டினத்தார் பாடல்!

பிறந்தன இறக்கு மிறந்தன பிறக்கும்
தோன்றின மறையு மறைந்தன தோன்றும்
பெருந்தன சிறுக்குஞ் சிறுத்தன பெருக்கும்
உணர்ந்தன மறக்கு மறந்தன வுணரும்
புணர்ந்தன பிரியும் பிரிந்தன புணரும்








அருந்தின மலமாம் புனைந்தன அழுக்காம்
உவப்பன வெறுப்பாம் வெறுப்பன உவப்பாம்
என்றிவை யனைத்து முணர்ந்தனை யன்றியும் - பட்டினத்தார்



பிறந்த உயிர்கள் அனைத்தும் இறக்கின்றன் இறந்த உயிர்கள் மீண்டும் பிறக்கின்றன. பெரிய பொருள் சிறிய பொருளாகும் சிறிய பொருள் பெரியவையாகும். அறிந்தவை அனைத்தும் மறந்துபோகும் மறந்தவை அனைத்தும் தெரியவரும். சேர்ந்தவை அனைத்தும் பிரியும். பிரிந்தவை அனைத்தும் சேரும். உண்டவை அனைத்தும் மலமாம். புனைந்த அனைத்தும் அழுக்கு ஏறிவிடுமாம். இன்று விரும்புபவை நாளை வெறுக்க தோன்றும் நேற்று வெறுத்தவை இன்று விரும்ப தோன்றும் என்று அனைத்தையும் உணர்ந்து விட்டேன்,

Monday, May 12, 2014

நோய் தீர்க்கும் சதுரகிரி மலை..!


சதுரகிரி மகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைக்கோயிலாகும்.

நோய் தீர்க்கும் மலை: சதுரகிரி மலையி...ல் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது.





இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்றுபட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள்.

சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர்.

திசைக்கு நான்கு கிரிகள் (மலை)வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர்.

தாணிப்பாறை அடிவாரம் - கருப்பர் சந்நிதி அருகே உள்ள தீர்த்தம்

* மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை "சஞ்சீவி மலை' என்கின்றனர்.

*சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது.

*ஆடி அமாவாசை முக்கிய விழா. தை அமாவாசை, மகாளய அமாவாசை, மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, மார்கழி முதல் நாள் ஆகிய நாட்களிலும் அதிக கூட்டம் இருக்கும்.

* பழநியிலுள்ள நவபாஷாண முருகன் சிலையை போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்தபோதே செய்ததாக கூறப்படுகிறது.

*இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு, இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும். பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக இந்த புல்லை உபயோகித்துள்ளார்கள்.

*மகாலிங்கம் கோயிலின் வடக்கே "ஊஞ்சல் கருப்பண சாமி' கோயில் உள்ளது.

* சுந்தர மகாலிங்கத்திற்கு அமாவாசை நாட்களில் மதியம் 1 மணிக்கு அபிஷேகம் துவங்கும்.

* ஆடி அமாவாசை தவிர மற்ற அமாவாசை நாட்களில் தேனும், தினைமாவும் பிரசாதமாக தரப்படுகிறது.

* சதுரகிரி மலைக்கு மின்சார வசதி கிடையாது. ஜெனரேட்டர் பயன்படுத்துகின்றனர்.

இருப்பிடம்:

மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் பஸ்களில் சென்றால், தாணிப்பாறை விலக்கில் இறங்கலாம். இங்கிருந்து 7 கி.மீ., தூரம் சென்றால் சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை வரும். அங்கிருந்து மலை ஏறி, 10 கி.மீ., நடந்தால் மகாலிங்கத்தை தரிசிக்கலாம்.
அல்லது , மதுரையிலிருந்து ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் - செங்கோட்டை செல்லும் பஸ் உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் , செங்கோட்டை செல்லும் பஸ்ஸில் ஏறி - கிருஷ்ணன் கோவில் நிறுத்தத்தில் இறங்கி - அங்கிருந்து வத்திராயிருப்பு செல்லுங்கள். ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் பேருந்து வசதி உள்ளது.
அங்கிருந்து தாணிப் பாறைக்கு - மினிபஸ் அல்லது ஆட்டோவில் சென்று விடுங்கள்.

திறக்கும் நேரம்:

காலை 6- 12 மணி, மாலை 4- இரவு 9 மணி. விசேஷ நாட்களில் நடை திறக்கும் நேரம் மாறுபடும்.போன்: 98436 37301, 96268 32131

மலைக்கு மேலே - சாப்பாடு பற்றிய கவலை வேண்டாம். எந்த நேரமும், உங்கள் வயிறை குளிரவைக்க " கஞ்சி மடம் ' உள்ளது. உங்களுக்கு குறைந்த பட்சம், கஞ்சியோ , கூழோ , பழைய சோறோ - நிச்சயம் கிடைக்கும். 24 மணி நேரமும் என்பதுதான் விசேஷம். மிகப் பெரிய குழுவாக சென்றால், முன்கூட்டியே சொல்லி விடுங்கள். சுடச்சுட சாதம் கிடைக்கும்.

சதுரகிரி தல வரலாறு : சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன்- திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் மாமனார் வீட்டில் பாலைக் கொடுத்து விட்டு வருவாள். ஒருமுறை, பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள்.

வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார். பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான். தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட அவர், அவளுக்கு "சடதாரி' என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார். மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான்.

சுந்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும் சிவதரிசனம் கிடைத்தது. ஒருநாள், சிவன் ஒரு துறவியின் வேடத்தில், சிவபூஜைக்கு பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடித்து கொண்டிருந்தார். இதைக்கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தான். அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார்.

சிவனை அடித்துவிட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி அழுதான்.
சிவபெருமான் அவனை தேற்றி, "" நீ தேவலோகத்தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன். நீ யாழ் மீட்டி என்னை பாடி மகிழ்விப்பாய். சிற்றின்ப ஆசை காரணமாக என்னால் சபிக்கப்பட்டு பூலோகத்தில் மனிதனாக பிறந்தாய். உன்னை மீட்டு செல்லவே வந்தேன்,'' என்று கூறி அவனுக்கு முக்தி அளித்தார். அத்துடன் அங்கிருந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி "மகாலிங்கம்' என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார். இது லிங்கங்களிலேயே பெருமை வாய்ந்தது என சதுரகிரி புராணம் கூறுகிறது. இன்றும் கூட மகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதையும், தலையில் அடிபட்ட தழும்பையும் காணலாம்.சதுரகிரி மலை ஏறுவது கடினமானது. மலையே சிவமாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து மலையேற வேண்டும்.
மலையடிவாரத்தில் ஆசீர்வாத விநாயகரை வணங்கியபின் சிவசிந்தனையுடன் மலை யாத்திரையைத் தொடங்க வேண்டும். செல்லும் வழியில் ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோயில்கள் உள்ளன. இதனை அடுத்து குதிரை ஊற்று, வழுக்குப்பாறைகள் வருகின்றன.
இந்தப்பாறைகளில் மழைக்காலங்களில் செல்வது கடினம். சிறிது தூரம் சென்றதும் அத்திரி மகரிஷி பூஜித்த லிங்கத்தை தரிசிக்கலாம். அடுத்து வருவது காராம் பசுத்தடம். இந்த இடத்தில் தான் சிவன் துறவி வேடம் கொண்டு காராம் பசுவின் மடுவில் பால் அருந்தியதாக வரலாறு.
இதனையடுத்து கோரக்க சித்தர் தவம் செய்த குகையும், பதஞ்சலி முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் உள்ளது. இந்த லிங்கத்தை தரிசிக்க வேண்டுமானால், ஆகாய கங்கை தீர்த்தத்துக்கு மேல் உள்ள விழுதுகளைப் பிடித்து தொங்கி ஏறித்தான் செல்ல வேண்டும். இது ஆபத்தான இடம். இதன் பவித்திரம் உணராமல் இங்கே குளிக்கவோ, தண்ணீர் எடுக்கவோ பக்தர்கள் முயற்சிக்கக் கூடாது. இதை ஒட்டிய குகையில் உள்ளே ஒரு சிறிய லிங்கம் உள்ளது. இதை நீங்கள் காணும்போது , மெய் சிலிர்க்கும் அனுபவம் உங்களுக்கு ஏற்படுவது உறுதி.

கோரக்கர் மலைக்கு நேர் மேலே செங்குத்தான மலையில் சற்று மேலே ஏறினால் ஒரு லிங்கம் உள்ளது. கொஞ்சம் இளவட்ட ஆளுங்க போக முடியும். ரொம்பவே செங்குத்தான பாதை. அதனால் , அனைவரும் முயற்சிக்க வேண்டாம்.

இதையடுத்து இரட்டை லிங்கத்தை தரிசிக்கலாம். சற்று தூரத்தில் சின்ன பசுக்கடை என்ற பகுதியை கடந்தால் நாவல் ஊற்று வருகிறது. இந்த ஊற்று நீருக்கு சர்க்கரை நோயைக் குணமாக்கும் மகிமை இருப்பதாக கூறப்படுவதால், பக்தர்கள் இதைப் பருகுகிறார்கள். பின்னர், பச்சரிசிப்பாறை, வனதுர்க்கை கோயில், பெரிய பசுக்கிடை, பிலாவடி கருப்பு கோயிலைத் தரிசித்து, மகாலிங்கம் கோயிலை அடையலாம். மலையிலுள்ள 10 கி.மீ. தூரத்தை கடக்க 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும்.

இரட்டை லிங்கம்: ஆனந்த சுந்தரம் என்ற வியாபாரிக்கு சிவன் மீது அளவு கடந்த ஈடுபாடு இருந்தது. அவரது மனைவி ஆண்டாள். பெருமாள் பக்தை. இவர்கள் இருவரும், தான் வணங்கும் கடவுளே பெரியவர் என்று தர்க்கம் செய்வர். இதற்கு விடை காண இருவரும் சதுரகிரி வந்து தியானம் செய்தனர். இவர்கள் முன்பு சிவன் தோன்றினார்.


""சிவபெருமானே! தாங்களே அனைத்துமாக இருக்கிறீர்கள், என்பதை என் மனைவியிடம் தெரிவிக்க வேண்டும்,''என வேண்டினார் வியாபாரி. சிவன் ஆண்டாளிடம் சென்றார். அவளோ, ""நான் உம்மை நினைத்ததே இல்லை. பெருமாளை நினைத்தே தவம் செய்தேன்,'' என்றாள்.

அப்போது சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி கொடுத்தனர். இதன் அடிப்படையில் மலை ஏறும் வழியில் சிவலிங்கம், விஷ்ணு லிங்கம் என இரட்டை லிங்கம் பிரதிஷ்டை செய்து ராமதேவ சித்தர் என்பவர் பூஜை செய்தார். இந்த சன்னதிக்கு எதிரே ராமதேவர் குகை இருக்கிறது.

பிலாவடி கருப்பு: வணிகர் ஒருவருக்கு சிவன் கோயில் கட்டும் ஆசை இருந்தது. ஆனால், பணம் போதவில்லை. பலரிடம் உதவி கேட்டும் இவரது தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. முனிவர் ஒருவர், ""சதுரகிரியில் உள்ள காலங்கிநாத சித்தரிடம் சென்றால் உனது விருப்பம் நிறைவேறும்,'' என்றார்.

வணிகரும் சதுரகிரி வந்து காலங்கிநாதரை தரிசித்தார். அவர் அங்குள்ள சில மூலிகைகளைக் கொண்டு உலோகங்களை தங்கமாக்கி அவனிடம் கொடுத்தார். மீதமிருந்த தங்கத்தையும், தங்கம் தயாரிக்க பயன்பட்ட தைலத்தையும் ஒரு கிணற்றில் கொட்டி பாறையால் மூடினார். இந்த கிணற்றுக்கு காவலாக கருப்பசுவாமியை நியமித்தார். இவரது சன்னதியில் மூன்று காய்களுடன் கூடிய பலாமரம் உள்ளது. இதனால், இவரை "பிலாவடி கருப்பர்' என அழைத்தனர். இந்த மரத்தில், ஒரு காய் விழுந்து விட்டால் இன்னொரு காய் காய்க்கும் அதிசயம் பல ஆண்டுகளாக நடக்கிறது.
பெரிய மகாலிங்கம்: நடுக்காட்டு நாகர் சன்னதியை அடுத்து, லிங்க வடிவ பாறை உள்ளது. இதை "பெரிய மகாலிங்கம்' என்கின்றனர். பெரிய மகாலிங்கத்திற்கு அடியில் சிறு லிங்கம் உள்ளது. சாதாரண நாட்களில் இதற்கு மட்டுமே அபிஷேக ஆராதனை நடக்கிறது. சிவராத்திரியன்று மட்டும் பெரிய லிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

தவசிப்பாறை: மகாலிங்கம் கோயிலிலுள்ள ஆனந்தவல்லி அம்மன் சன்னதிக்கு பின்புறமாக சென்று, மேற்கு பக்கமாக ஏறி, கிழக்கு பக்கமாக இறங்கினால் தவசிப்பாறையை (தபசுப்பாறை) அடையலாம். இது கடல்மட்டத்தில் இருந்து 5000 அடி உயரத்தில் உள்ளது. கோயிலில் இருந்து தவசிப்பாறை செல்ல குறைந்தது 2 மணி நேரமாகும். இது மிகவும் சிரமமான பயணம். பாறைக்கு செல்லும் வழியில் "மஞ்சள் ஊத்து' தீர்த்தம் உள்ளது.


தவசிப்பாறையில் சித்தர்கள் தவம் செய்யும் குகை உள்ளது. குகைக்குள் ஒரு ஆள் மட்டுமே மிகவும் சிரமப்பட்டு செல்லும்படியான துவாரம் உள்ளது. உள்ளே சென்ற பிறகு, பத்து பேர் அமர்ந்து தியானம் செய்ய வசதியிருக்கிறது. இதனுள் ஒரு லிங்கம் உள்ளது. மன திடம் உள்ளவர்கள் மட்டுமே இந்த குகைக்குள் சென்று லிங்கத்தை தரிசனம் செய்ய முடியும். இந்த குகையில் தான் 18 சித்தர்களும் தினமும் சிவபூஜை செய்வதாக கூறப்படுகிறது. குகைக்கு மேலே 9 பெரிய பாறாங்கற்கள் உள்ளன. இவற்றை "நவக் கிரக கல்' என்கிறார்கள். இதற்கு அடுத்துள்ள "ஏசி' பாறையின் கீழ் அமர்ந்தால், கடும் வெயிலிலும் மிகக் குளுமையாக இருக்கும். தவசிப் பாறையிலிருந்து கிழக்குப்பக்கமாக கீழிறங்கும் வழியில் "வெள்ளைப்பிள்ளையார்' பாறை உள்ளது. பார்ப்பதற்கு விநாயகர் போல் தெரியும். இங்குள்ள ஒரு மரத்தின் இடையில் அரையடி உயர பலகைக்கல் விநாயகர் சிலை உள்ளது. அருகில் நடுக்காட்டு நாகர் சன்னதி உள்ளது.

சுந்தரமூர்த்தி

கைலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடந்தபோது, அகத்தியர் தெற்கே வந்தார். அவர் சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடு செய்தார். அவர் அமைத்த லிங்கமே சுந்தரமூர்த்தி லிங்கம் ஆகும். சதுரகிரியில் அகத்தியர் தங்கியிருந்த குன்றை "கும்ப மலை' என்கின் றனர். அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சுந்தரானந்த சித்தர் பூஜித்து வந்தார். இதனாலேயே இந்த லிங்கம் "சுந்தரமூர்த்தி லிங்கம்' எனப்படுகிறது. அருளை வழங்குவது "சுந்தரமகாலிங்கம்', பொருளை வழங்குவது "சுந்தரமூர்த்தி லிங்கம்' என்று கூறுவர். சதுரகிரி கோயிலின் நுழைவுப்பகுதியில் இந்த லிங்கம் இருக்கிறது. இரவு 12 மணியளவில் இந்த சன்னதி அருகே யாரும் செல்வதில்லை. அப்போது, சித்தர்கள் அவரை தரிசிக்க வருவதாக ஐதீகம்.

பார்வதி பூஜித்த லிங்கம் :

சுந்தர மகாலிங்கம் கோயிலிலிருந்து சற்று மேடான பகுதியில் சந்தன மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. பிருங்கி மகரிஷி சிவனை மட்டும் வழிபட்டு, சக்தியைக் கவனிக்காமல் போய்விடுவார். எனவே, சிவனுடன் ஒன்றாக இணைந்திருக்க வேண்டி, அவர் உடலில் பாதியைக் கேட்டு, பூலோகம் வந்து சதுரகிரி மலையில் லிங்க பூஜை செய்தாள். தினமும் சந்தன அபிஷேகம் செய்தாள். மகிழ்ந்த சிவன் பார்வதியை தன்னுடன் இணைத்து "அர்த்தநாரீஸ்வரர்' ஆனார் என தல வரலாறு கூறுகிறது. பார்வதி தான் அமைத்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய ஆகாய கங்கையை வரவழைத்தாள். இங்குள்ள சந்தன மாரியம்மன் சன்னதி அருகில் ஓடும்

இந்த தீர்த்தத்தால் சந்தன மகாலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர். பார்வதி பூஜித்த சந்தன மகாலிங்கத்தை, சட்டைநாத சித்தர் பூஜித்து வந்தார். மகாசிவராத்திரியன்று பக்தர்களே சந்தன மகாலிங்கத்தின் மீது பூத்தூவி வழிபடுகின்றனர்.

இக்கோயிலில் சந்தன மகாலிங்கம், சந்தன விநாயகர், சந்தன முருகன், சந்தன மாரி என எல்லாமே சந்தன மயம் தான். 18 சித்தர்களுக்கும் சிலை உள்ளது. செண்பகப்பூவை காயவைத்து வாசனைக்காக விபூதியில் கலந்து கொடுக்கிறார்கள்.இங்கிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் வனகாளி கோயில் உள்ளது.
லிங்க வடிவ அம்பிகை

சிவனைப்போலவே அம்மனும் இங்கு நிரந்தரமாக தங்கி அருள்பாலிக்க வேண்டும் என விரும்பிய சித்தர்கள் நவராத்திரி நாட்களில் கடுமையாக தவம் இருந்தனர். இதை ஆனந்தமாக ஏற்ற அம்மன் "ஆனந்தவல்லி' என்ற திருநாமத்தில் லிங்கவடிவில் எழுந்தருளினாள். சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு பின்புறம் இவளது சன்னதி உள்ளது. நவராத்திரி நாட்களில் உற்சவ அம்மனின் பவனி நடக்கும். விஜயதசமியன்று அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்து பாரிவேட்டை நடக்கிறது.
சதுரகிரியில் தீர்த்தங்கள்

சந்திர தீர்த்தம்

சதுரகிரியில் சுந்தர மகாலிங்க மலையில் 'சந்திர தீர்த்தம்' இருக்கிறது.இந்த சந்திர தீர்த்தத்தில் இறைவனை வேண்டி வணங்கி ஒரு முறை நீராடினால் கொலை, காமம், குரு துரோகம் போன்ற பஞ்சமா பாதங்களிலிருந்து நீங்கி புண்ணியம் பெறலாம்.

கெளண்டின்னிய தீர்த்தம்.

சந்திர தீர்த்தத்திற்கு வடபுறத்தில் உள்ளது இந்தத் தீர்த்தம். இது தெய்வீகத் தன்மை வாய்ந்த நதியாகும். வறட்சியுற்ற காலத்தில் தேவர்களும், ரிஷிகளும் சிவபெருமான் வேண்ட, ஈசன் தமது சடை முடியில் உள்ள கங்கைலிருந்து ஒரு துளி எடுத்து நான்கு கிரிகளுக்கும் மத்தியில் விட்டு, லிங்கத்தில் மறைந்தார் என்பது ஐதீகம்.

கங்கை, கோதாரி, கோமதி, சிந்து, தாமிரவருணி, துங்கபத்திரை முதலிய புண்ணிய நதிகளுக்கு நீராடிய பயனுண்டு. இந்த நதியில் நீராடுவதால் சகல பாவங்களும் தீர்வதால் இதற்கு ''பாவகரி நதி'' என்னும் பெயரும் உண்டு.
சந்தன மகாலிங்கம் தீர்த்தம்.

இச்சதுரகிரியின் மேல் 'காளிவனம்' என்கிற இருண்டவனம் ஒன்றுள்ளது. அவ்வனத்திலிருந்து வருகிற தீர்த்தம் சந்தனமகாலிங்க தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. உமையாள் பிருங்க முனிவர் தம்மை வணங்காமல் ஈசனை வணங்கியமையால் ஏற்பட்ட கோபத்தின் காரணமாகச் சிவபெருமானை விட்டுப் பிரிந்து, அர்த்த நாரீஸ்வரர் என்கிற சிவசக்தி கோலத்தில் இருக்க வேண்டி சதுரகிரிக்கு வந்து லிங்கப் பிரதிஷ்டை செய்து அபிஷேகத்திற்கு வரவழைத்த ஆகாய கங்கையாகும்.

இப்புண்ணிய தீர்த்ததில் நீராடினால், எந்தப் பாவமும் நீங்கி முக்தி கிடைக்கும்.
இது தவிர, சதுரகிரியில் பார்வதி தேவியின் பணிப்பெண்களான சப்த கன்னியர்கள் தாங்கள் நீராடுவதற்கு உண்டாக்கிய 'திருமஞ்சனப் பொய்கை' உண்டு.

காலாங்கிநாதரால் உண்டாக்கப்பட்ட 'பிரம்மதீர்த்தம்' ஒன்று சதுரகிரி மலைக்
காவலராகிய கருப்பணசுவாமி சன்னதி முன்பாக இருக்கிறது. இது தவிர கோரக்கர், இராமதேவர், போகர் முதலிய மகரிஷிகளால் உண்டாக்கப்பட்ட 'பொய்கைத் தீர்த்தம்'', ''பசுக்கிடைத் தீர்த்தம்'', 'குளிராட்டித் தீர்த்தம்' போன்ற அனேக தீர்த்தங்கள் சதுரகிரி மலையில் உள்ளன.மகாலிங்கம் கோயிலிலிருந்து சாப்டூர் செல்லும் வழியில் உள்ள குளிராட்டி பொய்கையில் நீர் வற்றாது. இதில் குளித்தால் கிரக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.
மகரிஷிகளும், சித்தர்களும் இன்றும் அருவுருவாக வாழ்ந்தும் அருள் வழங்கும் வண்ணம் சதுரகியில் வீற்றிருக்கிறார்கள்.
பொதுவாகவே மலைகளின் மேல், மனிதர்களுக்கு ஆயுளும், ஆரோக்கியமும் தரும் அற்புதமான பல மூலிகைகளும், மருத்துவ குணம் நிறைந்த மரம் செடி கொடிகள் யாவும் இருக்கின்றன. இவைகளைத் தழுவி வரும் காற்று நம் மீதுபட்டவுடன் உடலில் உள்ள நோய்கள் தீர்கின்றன.

அபூர்வ மூலிகைகள் :

இங்கே கிடைக்கும் பல அற்புத மூலிகைகளில் முறிந்த எலும்பை கூடவைக்கும் மூலிகை இலை கூட இங்கே உள்ளது . முறிந்த எலும்புகளை ஒன்று கூட்டி, இந்த மூலிகை இலையை வைத்துக் கட்டினால் அதிசயத்தக்க வகையில் எலும்பு கூடும்.

பூமியில் எங்கும் காணக் கிடைக்காத ஜோதி விருட்சமும், சாயா விருட்சம் போன்ற அதி அற்புதமான மரங்கள், மூலிகைகள், இலைகள் இம்மலையில் மேல் உள்ளன. இறவாமை அளிக்கக்கூடிய கருநெல்லி போன்ற அரிய கனிவகைகள் இருக்கின்றன.

தவிர கோரக்க முனிவரால் 'உதகம்' என்று குறிப்பிடப்படும் உதகநீர் சுனையும் உண்டு. மருத்துவ குனம் கொண்ட மரம், செடிகொடிகளின் மேல் பட்டு இறங்கி வரும் தண்ணீர் தேங்கியசுனைகள் இருக்கிறது.

இந்தச் சுனையில் உள்ள நீருக்குத் தான் 'உதகம்' என்று பெயர். பார்ப்பதற்கு குழம்பிய சேற்று நீர்போல் காணப்படும். இந்த உதகநீர் மருத்துவ குணங்களைக் கொண்டது. இதுபோன்ற நீரை நாம் பருகிவிட முடியாது.
விபரங்கள் அறிந்தவர்க்ளின் மூலமும், துணையோடு அந்நீரை மருந்தாக
பயன்படுத்த வேண்டும்.

சதுரகிரி மலையில் தபசு குகைக்கு அருகில் கற்கண்டு மலைக்குக்கீழ் அடிவாரத்தில் சுணங்க விருட்சம் என்னும் மரம் உள்ளது.
இந்த மரத்தின் காய் நாய்க்குட்டி போலிருக்கும். அந்தக் காய் கனிந்து விழும்போது நாய்க்குட்டி குரைப்பதைப் போல் இருக்கும். விழுந்த கனி 10 வினாடிக்குப் பிறகுமறுபடியும் அம்மரத்திலேயே போய் ஒட்டிக்கொள்ளும்.
அதேபோல் 'ஏர் அழிஞ்ச மரம்' என்றொரு மரம் உண்டு.

இந்த மரத்தில் காய்க்கும் காய் முற்றியவுடன் கீழே விழுந்து விடும். விழுந்த காய் காய்ந்து அதன் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் போய் ஒட்டிக்கொள்ளும். இடையில் மழை, காற்றினால் மரத்தை விட்டு தள்ளிப்போய் இருந்தாலும் மேல் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில்
வந்து ஒட்டிக்கொள்ளும்.

இந்த 'ஏர் அழிஞ்ச மரத்தின்' கொட்டைகளை எடுத்து எண்ணையில ஊறவைத்து அதன் மூலம் கிடைக்கும் மையை உபயோகித்து வசியம் செய்வது ஒரு வகை.

சதுரகிரியில் நந்தீஸ்வரர் வனத்தில் கனையெருமை விருட்சம் என்றொரு மரமுண்டு. அம்மரத்தினடியில் யாராவது ஆட்கள் போய் நின்றால் அம்மரம் எருமை போல் கனைக்கும். அம்மரத்தை வெட்டினால், குத்தினால் பால் வரும்.
இதேபோல் மற்றொரு விருட்சம் மரமும் உண்டு. இந்தவிருட்சம் நள்ளிரவில் கழுதைப் போல் கத்தும். வெட்டினால் பால் கொட்டும். நவபாஷண சேர்க்கையில் இந்த விருட்சக மரத்தின் பாலும் முக்கியமான சேர்க்கையாகும்.

இவை எல்லாவற்றையும் விட தூக்கி சாப்பிடும் விஷயம் ஒன்று உள்ளது. மலையில் மிக அடர்ந்த பகுதியில் - " மதி மயக்கி வனம்" என்ற பகுதி உள்ளது. இங்கே உள்ளே சென்றவர்கள் , மதியை மயக்கி அவர்கள் வெளியே வரவே முடியாது என்று கூறுகின்றனர். நான் கேள்விப்பட்ட வரை , எங்கள் அருகில் இருக்கும் கிராமத்துக் காரர் ஒருவர் வழி தவறி உள்ளே சென்று மாட்டிக்கொண்டு விட்டார். "மகாலிங்கம் காப்பாத்து, காப்பாத்து" என்று மூன்று நாட்கள் கதறி, ஒரு வழியாக அந்த வனத்திலிருந்து வெளியே வந்து விட்டார். அடர்ந்த காடு, நிறைய பூச்செடிகள் இருந்தது. எதுவும் கோவில் கூட இல்லை. ஆட்களே யாரும் இல்லை. பசியே தெரியவில்லை. வெளியே வந்தது ஆண்டவன் அருள் என்று, இன்றும் அவர் திரும்ப திரும்ப புலம்பிக் கொண்டே இருக்கிறார்.

இன்றும் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் - சித்தர்கள், ரிஷிகள் - மகாலிங்க பூஜை செய்ய வருகின்றனர். கூட்டம் கூட்டமாக நட்சத்திரங்கள் மலைப்பகுதிகளில் விழுகின்றன. வீடியோ காமிராக்களில் அதை நிறைய பகதர்கள் பதிவு செய்து இருக்கின்றனர். ஏற்கனவே நாம் " கட்டை விரல் அளவில் காட்சி தந்த சித்தர் பற்றிய பதிவை வாசகர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளோம். இவை அத்தனையும் சர்வ நிஜம். இறை நம்பிக்கை உள்ள பக்தர்கள் , வாழ்வில் ஒரு முறையேனும் இந்த மகாலிங்கத்தையும் , சந்தன மகா லிங்கத்தையும் - மனமுருக பூஜித்து வழிபட்டு வாருங்கள். நீங்கள் நினைத்ததை சாதிக்கும் வல்லமையை அந்த சிவம் உங்களுக்கு அளிக்கும்.
உங்கள் தேடல் , பக்தி உண்மை எனில் - நீங்கள் மனதார நினைத்து வழிபாடு செய்யும் சித்தர் தரிசனம் உங்களுக்கு சதுரகிரியில் நிச்சயம் கைகூடும். இதை நிறைய பக்தர்கள் அனுபவித்து இருப்பதால் , இப்போதெல்லாம் சதுரகிரியில் கூடும் கூட்டத்திற்கு குறைவில்லை..

சதுரகிரி மலை - ஒரு ஆன்மிக உலா

சாதாரண மலைகளைப் போலல்ல இது. வீரியம் நிறைந்த வினோதமான மலை. கணக்கற்ற இரகசியங்களைத் தன்னுள்ளே பொதித்துக் கொண்டு அமைதியாய்க் காணப்படும் அபூர்வ மலை.

சித்தர்களின் இராஜ்ஜியமாகவும், அபாயகரமான காட்டுவாழ் விலங்கினங்களின் புகலிடமாகவும், அபூர்வ சக்திகள் படைத்த மூலிகைகளின் வாழ்விடமாகவும் விளங்கும் இம்மலை, பரம்பொருள் சிவபரமாத்மாவின் அருட்கடாட்சம் பெற்றபடியால் சிவன்மலை என்றும் மகாலிங்க மலை என்றும் அழைக்கப்படுகிறது.

சிவனும் பார்வதி தேவியும் இங்கே நிரந்தரமாகத் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக சித்தர்களுக்கு வாக்குத் தந்திருப்பதால் இவ்விடம் தென்கயிலாயம் என்றும் அழைக்கப்படுகிறது.

இம்மலை அஷ்டமாசித்திகள் பெற்ற பதினெட்டு சித்தர்களின் தலைமையிடமாகவும், மற்றும் பல சித்தர்கள் கூடி தத்தம் ராய்ச்சிகளை விவாதிக்கும் இடமாகவும் அறியப்படுகிறது. இம்மலையிலுள்ள நூற்றுக்கணக்கான குகைகளில் தங்கியிருந்து சிவனை வணங்கி வழிபட்டு வந்ததுடன் மக்களின் நோய் தீர்க்கும், துன்பங்களைக் களையும் மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ராய்ச்சிகளிலும் சித்தர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.

சித்தர்பூமியாம் சதுரகிரியில் எண்ணற்ற மூலிகைகள் நிறைந்த வனம் உள்ளது. இன்றும் இம்மலையில் சித்தர் பெருமக்கள் அரூபமாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. சித்தர்களின் அதிர்வலைகள் மலையெங்கும் நிறைந்திருப்பதால் அதில் சிறிதாவது தமது உடலில் ஒட்டட்டும் என பக்தர்கள் விரும்பி இங்கு வருகின்றனர்.

Monday, May 5, 2014

நெற்றியில் திருநீறு பூசுவதால் என்ன நன்மை?

நெற்றியில் திருநீறு தரித்துக் கொள்வது உயர்ந்த தத்துவத்தை விளக்குகிறது. நாடாண்ட மன்னனும், மாசறக் கற்றவரும் கடைசியில் சாம்பலாகத் தான் போகப் போகிறோம்.





இந்த வாழ்க்கை மாயமானது என்பதை விபூதி உணர்த்துகிறது. பிறக்கும்போதும் மண்ணிலே பிறந்தோம். சாகும்போது மண்ணிலே தான் சாகப் போகிறோம்.


மண்ணிலே பிறந்த மரம் இறுதியில் மண்ணிலேயே மட்கி மண்ணோடு மண்ணாகத் தான் போகிறது. நம்மை முடிவில் அடக்கிக் கொள்ளப் போகிற தத்துவம் அதுதான். இதை நினைவுபடுத்திக் கொள்ளவே, நெற்றியில் விபூதி அணிகிறோம். மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக மிக அதிக மாக சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும். இது ஒரு வர்ம ஸாதனம் கூட. சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும், அதனால்தான் நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள்.

Friday, May 2, 2014

பிள்ளையார் கதை பாடல்...!!

பிள்ளையார் கதை பாடல்...!!!
இப் பாடலை 21 நாளும் விரதமிருந்து துதி
செய்ய நினைத்த காரியம் கைகூடும் .சகல
செல்வயோகம் மிக்க பெரு வாழ்வு வாழலாம் ..!!!






சிறப்புப் பாயிரம்

செந்தமிழ் முனிவன் செப்பிய காதையுங்
கந்த புராணக் கதையில் உள் ளதுவும்
இலிங்க புராணத்து இருந்தநற் கதையும்
உபதேச காண்டத்து உரைத்தநற் கதையும்
தேர்ந்தெடுத்து ஒன்றாய்த் திரட்டிஐங் கரற்கு
வாய்ந்தநல் விரத மான்மியம் உரைத்தான்
கன்னியங் கமுகிற் கயலினங் குதிக்குந்
துன்னிய வளவயற் சுன்னா கத்தோன்
அரங்க நாதன் அளித்தருள் புதல்வன்
திரம்பெறு முருகனைத் தினந்தொறும்
வரம்பெற வணங்கும் வரதபண் டிதனே.

காப்பு

கரும்பு மி்ளநீருங் காரெள்ளுந் தேனும்
விரும்பு மவல்பலவும் மேன்மே - லருந்திக்
குணமுடைய னாய்வந்து குற்றங்க டீர்க்குங்.
கணபதியே யிக்கதைக்குக் காப்பு.

திருவிளங்கு மான்மருகா சேவதனி லேறி
வருமரன்றா னீன்றருளு மைந்தா - முருகனுக்கு
முன்பிறந்த யானை முகவா வுனைத் தொழுவேன்
என்கதைக்கு நீயென்றுங் காப்பு.

விநாயகர் துதி

திருவாக்குஞ் செய்கருமங் கைகூட்டுஞ் செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரு மானை முகத்தோனைக்
காதலாற் கூப்புவர்தங் கை.

ஒற்றை யணிமருப்பு மோரிரண்டு கைத்தலமும்
வெற்றி புனைந்த விழிமூன்றும் - பெற்றதொரு
தண்டைக்கால் வாரணத்தைத் தன்மனத்தி லெப்பொமுதுங்
கொண்டக்கால் வராது கூற்று.

சப்பாணி

எள்ளு பொரிதேன் அவல்அப்பமிக்கும் பயறும் இளநீரும்
வள்ளிக் கிழங்கும் மாம்பழமும் வாழைப்பழமும் பலாப்பழமும்
வெள்ளைப்பாலும் மோதகமும் விரும்பிப்படைத்தேன் சந்நிதியில்
கொள்ளைக் கருணைக் கணபதியேகொட்டி அருள்க சப்பாணி.

சண்டப் பெருச்சாளி ஏறிச் சடைகொண்டு வையத் துலாவி
அண்டத்து அமரர் துதிக்க அடியார்க்கு அருளும் பிரானே
எண்திக்கும் அன்பர்கள் பார்க்க இணையற்ற பேரொளி வீசக்
குண்டைக் கணபதி நம்பி கொடுங்கையாற் சப்பாணி கொட்டே.

'சரஸ்வதி துதி'

புத்தகத் துள்ளுறை மாதே பூவில் அமர்ந்திடு வாழ்வே
வித்தகப் பெண்பிள்ளாய் நங்காய் வேதப் பொருளுக்கு இறைவி
முத்தின் குடைஉடை யாளே மூவுல குந்தொழுது ஏத்துஞ்
செப்புக் கவித்த முலையாய் செவ்வரி ஓடிய கண்ணாய்
தக்கோலந் தின்னும் வாயாய் சரஸ்வதி என்னுந் திருவே
எக்காலமும் உன்னைத் தொழுவேன் இயல்/இசை நாடகம் என்னும்
முத்தமிழ்க் கல்விகள் எல்லாம் முழுதும் எனக்கருள் செய்துஎன்
சித்தந் தனில்நீ இருந்து திருவருள் செய்திடுவாயே.

அதிகாரம்
பொன்னிறங் கடுக்கும் புனற்செறி குடுமித்
தென்மலை யிருந்த சீர்சால் முனிவரன்
கந்த மும்மதக் கரிமுகன் கதைதனைச்
செந்தமிழ் வகையாற் றெளிவுறச் செப்பினன்
அன்னதிற் பிறவினில் அரில்தபத் திரட்டித்
தொன்னெறி விளங்கச் சொல்லுவன் கதையே.
[அரில் = குற்றம்.]

நூல்:

மந்தர கிரியில் வடபால் ஆங்கு ஓர்
இந்துவளர் சோலை இராசமா நகரியில்

அந்தணன் ஒருவனும் ஆயிழை ஒருத்தியுஞ்
சுந்தரப் புதல்வரைப் பெறுதல் வேண்டிக்

கடவுள் ஆலயமுங் கடிமலர்ப் பொய்கையுந்
தடநிழற் பள்ளியுந் தாம்பல சமைத்துப்

புதல்வரைத் தருகெனப் பொருப்புஅரசு ஈன்ற
மதர்விழி பாகனை வழிபடு நாளின்

மற்றவர் புரியும் மாதவங் கண்டு
சிற்றிடை உமையாள் சிவனடி வணங்கிப் [10]

பரனே சிவனே பல்லுயிர்க்கு உயிரே
அரனே மறையவற்கு அருள்புரிந்து அருளென

அந்தஅந் தணனுக்கு இந்தநற் பிறப்பில்
மைந்தரில்லை யென்று மறுத்து அரன் உரைப்ப

எப்பரி சாயினும் எம்பொருட்டு ஒருசுதன்
தப்பிலா மறையோன் தனக்கு அருள் செய்கென

எமையா ளுடைய உமையாள் மொழிய
இமையா முக்கண் இறைவன் வெகுண்டு

பெண்சொற் கேட்டல் பேதைமை யென்று
பண்சொற் பயிலும் பாவையை நோக்கிப் [20]

பேதாய் நீபோய்ப் பிறவென மொழிய
மாதுஉமை யவளும் மனந்தளவு உற்றுப்

பொன்றிடு மானுடைப் புன்பிறப்பு எய்துதல்
நன்றல என்றே நடுக்கமுற்று உரைப்பக்

கறைமிடற்று அண்ணல் கருணை கூர்ந்து
பிறைநுத லவற்குநீ பிள்ளை யாகச்

சென்று அவண் வளர்ந்து சிலபகல் கழித்தால்
மன்றல்செய் தருள்வோம் வருந்தலை யென்று

விடைகொடுத்து அருள விலங்கன்மா மகளும்
பெடைம யிற்சாயற் பெண்மக வாகித் [30]

தார்மலி மார்பன் சதுர்மறைக் கிழவன்
சீர்மலி மனைவி திருவயிற் றுதித்துப்

பாவை சிற்றிலும் பந்தொடு கழங்கும்
யாவையும் பயின்ற இயல்பின ளாகி

ஐயாண்டு அடைந்தபின் அன்னையும் அத்தனும்
மையார் கருங்குழல் வாள்நுதல் தன்னை

மானுட மறையோற்கு வதுவை செய்திடக்
கானமர் குழலியைக் கருதிக் கேட்பப்

பிறப்பிறப் பில்லாப் பெரியோற்கு அன்றி
அறத்தகு வதுவைக்கு அமையேன் யான் என [40]

மற்றவன் தன்னைஉன் மணமக னாகப்
பெற்றிடல் அரிதெனப் பெயர்த்து அவர் பேச

அருந்தவ முயற்சியால் அணுகுவேன் யானெனக்
கருந்தட நெடுங்கண் கவுரி அங்கு உரைத்து

மருமலி கமல மலர்த்தடத்து அருகில்
தருமலி நிழல் தவச் சாலையது அமைத்துப்

பணியணி பற்பல பாங்கியர் சூழ
அணிமலர்க் குழல் உமை அருந்தவம் பயில

அரிவைதன் அருந்தவம் அறிவோம் யாமென
இருவரு மறியா விமையவர் பெருமான் [50]

மான் இடம் ஏந்தும் வண்ணமது ஒழிந்து
மானிட யோக மறையவன் ஆகிக்

குடையொடு தண்டுநற் குண்டிகை கொண்டு
மடமயில் தவம்புரி வாவிக் கரையில்

கண்ணுதல் வந்து கருணை காட்டித்
தண்நறும் கூந்தல் தையலை நோக்கி

மின்பெறு நுண்ணிடை மெல்லிய லாய்நீ
என்பெறத் தவமிங்கு இயற்றுவது என்றலும்

கொன்றை வார்சடையனைக் கூடஎன்று உரைத்தலும்
நன்று எனச் சிரித்து நான்மறை யோனும் [60]

மாட்டினில் ஏறி மான்மழுத் தரித்துக்
காட்டினிற் சுடலையிற் கணத்துடன் ஆடிப்

பாம்பும் எலும்பும் பல்தலை மாலையுஞ்
சாம்பரும் அணிந்து தலையோடு ஏந்திப்

பிச்சைகொண்டு உழலும் பித்தன் தன்னை
நச்சிநீ செய்தவம் நகைதரும் நுமக்கெனப்

பூங்கொடி அருந்தவம் பூசுரன் குலைத்தலும்
ஆங்குஅவள் நாணமுற்று அணிமனை புகுதச்

சேடியர் வந்து செழுமலர் குழலியை
வாடுதல் ஒழிகென மனமிகத் தேற்றிச் [70]

சிந்துர வாள்நுதற் சேடியர் தாம்போய்த்
தந்தைதா யிருவர் தாளினை வணங்கி

வாவிக் கரையில் வந்தொரு மறையோன்
பாவைதன் செங்கையைப் பற்றினான் என்றலுந்

தோடு அலர்கமலத் தொடைமறை முனியை
ஆடக மாடத்து அணிமனை கொணர்கஎன

மாடக யாழ்முரல் மங்கையர் ஓடி
நீடிய புகழாய் நீஎழுந்து அருள் என

மைம்மலர்க் குழலி வந்துஎனை அழைக்கில்
அம்மனைப் புகுவன் என்று அந்தணன் உரைத்தலும் [80]

பொற்றொடி நீபோய்ப் பொய்கையில் நின்ற
நற்றவ முனியை நடாத்திக் கொணர்கெனச்

சிவனை இகழ்ந்த சிற்றறி வுடையோன்
அவனையான் சென்றிங்கு அழைத்திடேன் என்று

சிற்றிடை மடந்தையுஞ் சீறினள் ஆகி
மற்றைய மாதர் மதிமுகம் நோக்கி

நெற்றியிற் கண்ணுடை நிமலனுக்கு அல்லதென்
பொற்புஅமர் கொங்கை பொருந்துதற்கு அரிதால்

மானிட வேட மறையவன் தனக்கு
யான்வெளிப் படுவ தில்லையென்று இசைப்ப [90]

மலையிடை வந்த மாமுனி தன்னை
இணையடி தொழுதல் இளையோர்க்கு இயல்பெனத்

தந்தையுந் தாயுந் தகைபெற மொழியச்
சிந்தை குளிர்ந்து சீறுதல் ஒழிந்து

தாய்சொல் மறுத்தல் பாவமென்று அஞ்சி
ஆயிழை தானும் அவனெதிர் சென்று

சுற்றிவந்து அவனடி சுந்தரி வணங்கி
மற்றவன் தன்னை மனையிற் கொணர்ந்து

ஆதியம் பகவற்கு அன்பன் ஆகும்
வேதியன் பழைய விருத்தன் என்றெண்ணி [100]

ஆசனம் நல்கி அருக்கியம் முதலாப்
பாத பூசனைகள் பண்ணிய பின்னர்ப்

போனகம் படைத்துப் பொரிக்கறி பருப்புநெய்
ஆன்பால் மாங்கனி அழகிய பலாச்சுளை

தேன்கத லிப்பழஞ் சீர்பெறப் படைத்து
அந்தணன் தன்னை அமுதுசெய் வித்துச்

சந்தனங் குங்குமச் சாந்துஇவை கொடுத்துத்
தக்கோ லத்தொடு சாதிக் காயும்

கற்பூ ரத்தொடு கவின்பெறக் கொண்டு
வெள்ளிலை அடைக்காய் விளங்கிய பொன்னின் [110]

ஒள்ளிய தட்டில் உகந்து முன்வைத்துச்
சிவனெனப் பாவனை செய்து நினைந்து

தவமறை முனிவனைத் தாளினை வணங்கத்
தேனமர் குழலி திருமுக நோக்கி

மோனமா முனிபுன் முறுவல் காட்டிக்
கற்றைச் சடையுங் கரமொரு நான்கும்

நெற்றியில் நயனமும் நீல கண்டமும்
மானும் மழுவும் மலர்க்கரத்து இலங்கக்

கூன்மதி நிலவுங் கொழித்திட முடிமேல்
வரந்தரு முதல்வன் மடமயில் காணக் [120]

கரந்ததன் உருவங் காட்டி முன்நிற்ப
மரகத மேனி மலைமகள் தானும்

விரைவொடுஅங்கு அவன் அடி வீழ்ந்துஇறைஞ் சினளே
அரிஅயன் இந்திரன் அமரர் விஞ்சையர்

கருடர் கின்னரர் காய வாசியர்
ஏதமில் முனிவர் அவுணர் இராக்கதர்

பூதர் இயக்கர்கிம் புருடர் அலகை
சித்தர் தாரகைகந் தருவர்கள் முதலாய்க்

கணிக்கரும் பதினெண் கணத்தில் உள்ளவரும்
மணிக்கருங் களத்தனை வந்தடைந்து அதன்பின் [130]

மன்றல் அங் குழலிக்கு வதுவைநாள் குறித்துத்
தென்றல் வந்துஇலங்கு முன்றில் அகத்துப்

பொன்திகழ் பவளப் பொற்கால் நாட்டி
மாணிக் கத்தால் வளைபல பரப்பி

ஆணிப்பொன் தகட்டால் அழகுற வேய்ந்து
நித்தில மாலை நிரைநிரை தூக்கிப்

பக்திகள் தோறும் பலமணி பதித்துத்
தோரணம் நாட்டித் துகில்விதா னித்துப்

பூரணப் பொற்குடம் பொலிவுற வைத்துத்
திக்குத் தோறும் திருவிளக் கேற்றிப் [140]

பத்திப் படர்முளைப் பாலிகை பரப்பிக்
கன்னலுங் கழுகுங் கதலியும் நாட்டிப்

பன்மலர் நாற்றிப் பந்தர் சோடித்து
நலமிகு கைவலோர் நஞ்சணி மிடற்றனைக்

குலவிய திருமணக் கோலம் புனைந்தார்
வருசுரர் மகளிர் மலைமகள் தன்னைத்

திருமணக் கோலஞ் செய்தன ராங்கே
எம்பி ரானையும் இளங்கொடி தன்னையும்

உம்பர் எல்லாம் ஒருங்குடன் கூடிக்
கடலென விளங்கும் காவணந் தன்னில் [150]

[151 முதல் 199 வரை] [சிவன், உமை திருக்கல்யாணமும், விநாயகர் அவதாரமும் இதில் கவனிக்கத் தக்கது.]

சுடர்விடு பவளச் சுந்தரப் பலகையி்ல்
மறைபுகழ்ந்து ஏத்த மகிழ்ந்து உடன் இருத்திப்

பறையொ லியோடு பனிவளை ஆர்ப்ப
வதுவைக்கு ஏற்ற மறைவிதி நெறியே

சதுர்முகன் ஓமச் சடங்குகள் இயற்றத்
தறுகலன் ஒளிபொன் தாலி பூட்டிச்

சிறுமதி நுதலியைச் சிவன்கைப் பிடித்தபின்
அரிவலஞ் சூழ எரிவலம் வந்து

பரிவுடன் பரிமளப் பாயலில் வைகிப்
போதுஅணி கருங்குழற் பூவை தன்னுடனே [160]

ஓதநீர் வேலிசூழ் உஞ்சையம் பதிபுக
ஏரார் வழியில் எண்திசை தன்னைப்

பாரா தேவா பனிமொழி நீயென
வருங்கருங் குழலாள் மற்றும் உண் டோவெனத்

திருந்துஇழை மடந்தை திரும்பினாள் பார்க்கக்
களிறும் பிடியுங் கலந்துவிளை யாடல்கண்டு

ஒளிர்மணிப்பூணாள் உரவோ னுடனே
இவ்வகை யாய்விளை யாடுவோம் ஈங்கென

அவ்வகை அரனும் அதற்கு உடன் பட்டு
மதகரி யுரித்தோன் மதகரி யாக [170]

மதர்விழி உமைபிடி வடிவம் அதாகிக்
கூடிய கலவியில் குவலயம் விளங்க

நீடிய வானோர் நெறியுடன் வாழ
அந்தணர் சிறக்க ஆனினம் பெருகச்

செந்தழல் வேள்விவேத ஆகமம் சிறக்க
அறம்பல பெருக மறம்பல சுருங்கத்

திறம்பல அரசர் செகதலம் விளங்க
வெங்கரி முகமும் வியன்புழைக்கையோடு

ஐங்கர தலமு மலர்ப்பதம் இரண்டும்
பவளத்து ஒளிசேர் பைந் துவர்வாயுந் [180]

தவளக் கிம்புரித் தடமருப்பு இரண்டும்
கோடி சூரியர்போற் குலவிடு மேனியும்

பேழைபோல் அகன்ற பெருங்குட வயிறும்
நெற்றியில் நயனமும் முப்புரி நூலுங்

கற்றைச் சடையுங் கனகநீண் முடியுந்
தங்கிய முறம்போல் தழைமடிச் செவியுமாய்

ஐங்கரத்து அண்ணல் வந்துஅவ தரித்தலும்
பொங்கரவு அணிந்த புண்ணிய மூர்த்தியும்

மங்கை மனமிக மகிழ்ந்து உடன் நோக்கி
விண்ணு ளோர்களும் விரிந்த நான் முகனும் [190]

மண்ணு ளோர்களும் வந்துஉனை வணங்க
ஆங்குஅவர் தங்கட்கு அருள் சுரந்துஅருளித்

தீங்கது தீர்த்துச் செந்நெறி அளித்துப்
பாரண மாகப் பலகனி யருந்தி

ஏரணி ஆலின்கீழ் இனிதுஇரு என்று
பூதலந் தன்னிற் புதல்வனை யிருத்திக்

காதல்கூர் மடநடைக் கன்னியுந் தானும்
மைவளர் சோலை மாநகர் புகுந்து

தெய்வ நாயகன் சிறந்துஇனிது இருந்தபின்
வான வராலும் மானு டராலும் [200]


"பிள்ளையார் கதை" - 3

[201-400] [இந்தப் பதிவில், ஆவணியில் வரும் விநாயகர் சதுர்த்தி விரதமுறை சொல்லப்பட்டிருக்கிறது]

கானமர் கொடிய கடுவி லங்காலுங்
கருவி களாலுங் கால னாலும்

ஒருவகை யாலும் உயிர ழியாமல்
திரம்பெற மாதவஞ் செய்து முன்னாளில்

வரம் பெறுகின்ற வலிமை யினாலே
ஐம்முகச் சீயம்ஒத்து அடற்படை சூழக்

கைம்முகம் படைத்த கயமுகத்து அவுணன்
பொன்னுலகு அழித்துப் புலவரை வருத்தி

இந்நிலத் தவரை இடுக்கண் படுத்திக்
கொடுந் தொழில்புரியுங் கொடுமை கண்டு ஏங்கி [210]

அடுந்தொழிற் குலிசத்து அண்ணலும் அமரருங்
கறைபடு கண்டக் கடவுளைப் போற்றி

முறையிடக் கேட்டு முப்புர மெரித்தோன்
அஞ்சலீர் என்றுஅவர்க்கு அபயங் கொடுத்தே

அஞ்சுகைக் கரிமுகத்து அண்ணலை நோக்கி
ஆனைமா முகத்து அவுணனோடு அவன்தன்

சேனைகள் முழுவதுஞ் சிந்திடப் பொருது
குன்றுபோல் வளர்ந்த குறட்படை கூட்டி

வென்றுவா வென்று விடைகொ டுத்தருள
ஆங்குஅவன் தன்னோடு அமர்பல உடற்றிப் [220]

பாங்குறும் அவன்படை பற்றறக் கொன்றபின்
தேர்மிசை யேறிச் சினங்கொடு செருவிற்

கார்முகம் வளைத்த கயமுகா சுரன்மேல்
ஒற்றைவெண் மருப்பை ஒடித்து அவன் உரத்திற்

குற்றிட எறிந்தான் குருதிசோர்ந் திடவே
சோர்ந்த வன்வீழ்ந்து துண்ணென எழுந்து

வாய்ந்த மூடிகமாய் வந்துஅவன் பொரவே
வந்த மூடிகத்தை வாகனம் ஆக்கி

எந்தை விநாயகன் ஏறினன் இப்பால்
எறிந்த வெண்மருப்புஅங்கு இமைநொடி அளவில் [230]

செறிந்தது மற்றுஅவன் திருக்கரத் தினிலே
வெல்லவைக் கதிர்வேல் விழிபடைத்து அருளும்

வல்லவை தனைத்தன் மனைஎன மணந்தே
ஒகையோடு எழுந்துஆங்குஉயர்படை சூழ

வாகையும் புனைந்து வரும்வழி தன்னிற்
கருச்சங் கோட்டிக் கயல்கமுகு ஏறும்

திருச்செங் காட்டிற் சிவனை அர்ச்சித்துக்
கணபதீச் சுரம் எனுங் காரண நாமம்

கணபதி புகழ்தரு பதிக்குஉண் டாக்கிச்
சங்கரன் பார்ப்பதி தனிமன மகிழ [240]

இங்குவந்து அன்புடன் எய்திய பின்னர்க்
கணங்களுக்கு அரசாய்க் கதிர்முடி சூட்டி

இணங்கிய பெருமைபெற்றுஇருந்திட ஆங்கே
தேவர்கள் முனிவர் சித்தர் கந்தருவர்

யாவரும் வந்துஇவண் ஏவல் செய்திடுநாள்
அதிகமாய் உரைக்கும் ஆவணித் திங்களின்

மதிவளர் பக்கம் வந்திடு சதுர்த்தியில்
விநாயகற் குரிய விரதமென்று என்றெண்ணி

மனாதிகள் களித்து மரபொடு நோற்றார்
இப்படி நோற்றிட் டெண்ணிய பெறுநாள் [250]

ஒப்பரும் விரதத்துஉறும்ஒரு சதுர்த்தியில்
நோற்று நற்பூசை நுடங்காது ஆற்றிப்

போற்றி செய்திட்டார் புலவர் ஐங்கரனை
மருமலர் தூவும் வானவர் முன்னே

நிருமலன் குமரன் நிருத்தம் புரிந்தான்
அனைவருங் கைதொழுது அடிஇணை போற்ற

வனைகழற் சந்திரன் மனச்செருக்கு அதனால்
பேழைபோல் வயிறும் பெருத்த காத்திரமுந்

தாழ்துளைக் கையும் தழைமுறச் செவியுங்
கண்டனன் நகைத்தான் கரிமுகக் கடவுளுங் [260]

கொண்டனன் சீற்றம் குபேரனை நோக்கி
என்னைக் கண்டுஇங்கு இகழ்ந்தனை சிரித்தாய்

உன்னைக் கண்டவர் உரைக்கும் இத்தினத்திற்
பழியொடு பாவமும் பலபல விதனமும்

அழிவும் எய்துவர் என்று அசனிபோற் சபித்தான்
விண்ணவ ரெல்லாம் மிகமனம் வெருவிக்

கண்ணருள் கூருங் கடவுள் இத் தினத்திற்
கோரவெஞ் சினமிகக் கொண்டனன் அந்நாள்

மார்கழித் திங்கண் மதிவளர் பக்கஞ்
சதயந் தொட்ட சட்டிநல் விரதமென் [270]

இதயத்து எண்ணி யாவரும் நோற்றார்.
இப்புவி மாந்தர் இயம்பிய விரதம்

வைப்புடன் நோற்ற வகைஇனிச் சொல்வாம்
குருமணி முடிபுனை குருகுலத்து உதித்த

தருமனும் இளைய தம்பி மார்களுந்
தேவகி மைந்தன் திருமுக நோக்கி

எண்ணிய விரதம் இடையூ றின்றிப்
பண்ணிய பொழுதே பலிப்பு உண் டாகவுஞ்

செருவினில் எதிர்ந்த செறுநரை வென்று
மருமலர்ப் புயத்தில் வாகை சூடவும் [280]

எந்தத் தெய்வம் எவ்விர தத்தை
வந்தனை செய்யில் வருநமக்கு உரையெனப்

பாட்டுஅளி துதையும் பசுந்துழாய் மார்பனுங்
கேட்டருள் வீர் எனக் கிளர்த்துத லுற்றான்

அக்கு நீறணியும் அரன்முதல் அளித்தோன்
விக்கினந் தீர்க்கும் விநாயக மூர்த்தி

ஓடவைத் திடும்பொன் ஒத்துஒளி விளங்குங்
கோடி சூரியர்போற் குலவிய மேனியன்

கடகரி முகத்தோன் காத்திரம் பெருத்தோன்
தடவரை போலுஞ் சதுர்ப்புய முடையோன் [290]

சர்வா பரணமுந் தரிக்கப் பெற்றவன்
உறுமதிக் குழவிபோ லொருமருப் புடையோன்

ஒருகையில் தந்தம் ஒருகையிற் பாசம்
ஒருகையின் மோதகம் ஒருகையிற் செபஞ்செய்

உத்தம மாலையோன் உறுநினை வின்படி
சித்தி செய்வதனாற் சித்தி விநாயகன்

என்றுஇமை யவரும் யாவருந் துதிப்ப
நன்றி தரும்திரு நாமம் படைத்தோன்

புரவலர்க் காணப் புறப்படும் போதுஞ்
செருவினில் யுத்தஞ் செய்திடும் போதும் [300]

வித்தி யாரம்பம் விரும்பிடும் போதும்
உத்தி யோகங்கள் உஞற்றிடும் போதும்

ஆங்கவன் தன்னை அருச்சனை புரிந்தாற்
தீங்குஉறாது எல்லாஞ் செயம் உண் டாகும் [304]

கரதலம் ஐந்துக் கணபதிக்கு உரிய
விரதமொன்று உளதை விரும்பி நோற்றவர்க்குச்

சந்ததி தழைத்திடுஞ் சம்பத் துண்டாம்
புந்தியில் நினைந்த பொருள்கை கூடும்

மேலவர் தமையும் வென்றிட லாமெனத்
தேவகி மைந்தன் செப்பிடக் கேட்டு [310]

நுவலரும் விரதம் நோற்றிடு மியல்பும்
புகர்முகக் கடவுளைப் பூசை செய்விதமும்

விரித்தெமக்கு உரைத்திட வேண்டுமென்று இரப்ப
வரைக்குடை கவித்தோன் வகுத்துரை செய்வான்

தேருநீர் ஆவணித் திங்களின் மதிவளர்
பூர்வ பக்கம் புணர்ந்திடு சதுர்த்தியின்

முந்தும் புலரியின் முறைநீர் படிந்து
சந்தி வந்தனந் தவறாது இயற்றி
[புலரி=விடியல்]

அத்தினம் அதனில் ஐங்கரக் கடவுளைப்
பத்தியோடு அர்ச்சனை பண்ணுதல் வேண்டும் [320]

வெள்ளியாற் பொன்னால் விளங்கும் அவன்தன்
ஒள்ளிய அருள்திரு உருவுண் டாக்கிப்
[ஒள்ளிய=ஒளிவிளங்கும்]

பூசனை புரியப் புகன்றனர் பெரியோர்
ஆசுஇலா மண்ணால் அமைத்தலுந் தகுமால்
[ஆசு=குற்றம்]

பூசனஞ் செயுமிடம் புனித மாக்கி
வாசமென் மலரின் மஞ்சரி தூக்கிக்
[மஞ்சரி=பூங்கொத்து]

கோடிகம் கோசிகம் கொடிவிதா னித்து
நீடிய நூல்வளை நிறைகுடத்து இருத்தி
[கோடிகம், கோசிகம்=துணி, ஆடை]

விந்தைசேர் சித்தி விநாயக னுருவைச்
சிந்தையில் நினைந்து தியானம் பண்ணி [330]

ஆவா கனம் முதல் அர்க்கிய பாத்தியம்
வாகார் ஆச மனம்வரை கொடுத்து

ஐந்துஅமிர் தத்தால் அபிடே கித்துக்
கந்தம் சாத்திக் கணேச மந்திரத்தால்

ஈசுர புத்திரன் என்னும் மந்திரத்தால்
மாசுஅகல் இரண்டு வத்திரஞ் சாத்திப்

பொருந்துஉமை சுதனாப் புகலுமந் திரத்தால்
திருந்தும் பளிதத் தீபங் கொடுத்துப்
[பளிதம்=கற்பூரம்]

பச்சறுகு உடன் இரு பத்தொரு விதமாப்
பத்திர புட்பம் பலபல கொணர்ந்தே [340]

உமாசுதன் கணாதிபன் உயர்கரி முகத்தோன்
குமார குரவன் பாசாங் குசகரன்

ஏக தந்தன் ஈசுர புத்திரன்
ஆகு வாகனன் அருள்தரு விநாயகன்

சர்வ காரியமுந் தந்தருள் புரிவோன்
ஏரம்ப மூர்த்தி யென்னும் நாமங்களால்

ஆரம் பத்துடன் அர்ச்சனை பண்ணி
மோதகம் அப்பம் முதற்பணி காரந்

தீதுஅகல் மாங்கனி தீங்கத லிப்பழம்
வருக்கை கபித்த மாதுளங் கனியொடு

[வருக்கை=வருக்கைப்பலா, கபித்தம்=விளாம்பழம்] [350]

தரித்திடு நெட்டிலைத் தாழைமுப் புடைக்காய்
பருப்புநெய் பொரிக்கறி பால்தயிர் போனகம்

[நெட்டிலைத் தாழை=வெற்றிலை, முப்புடைக்காய்=[மூன்று பிரிவுகளை உடைய] தேங்காய்; பொரிக்கறி=புளியிடாமல் பொரித்த கறி; போனகம்=சோறு]

விருப்புள சுவைப்பொருள் மிகவும் முன்வைத்து
உருத்திரப் பிரியஎன்று உரைக்கும் மந்திரத்தால்

நிருந்தன் மகற்கு நிவேதனங் கொடுத்து
நற்றவர் புகன்ற நா னான்குஉப சாரமும்

[நானான்கு உபசாரம்= பதினாறு வகையான உபசார ஆவாஹனம், தாபனம், சந்நிதானம், ஸந்நிரோதனம், அவகுண்டனம். தேனுமுத்திரை, பாத்யம், ஆசமநியம், அர்க்யம், புஷ்பதானம்,தூபம்,தீபம்,சைவேத்யம்,பாநீயம்,ஜபஸமர்ப்பணை,ஆராத்திரிகம்.]

மற்றவன் திருவுளம் மகிழ்ந்திடச் செய்து
எண்ணுந் தகுதி இருபிறப் பாளர்க்கு

உண்அறு சுவைசேர் ஓதனம் நல்கிச்
சந்தன முத்துத் தானந் தக்கிணை
[தக்கிணை=தட்சணை] [360]

அந்தணர்க்கு ஈந்திட்டு அருச்சகன் தனக்குத்
திருத்தகும் விநாயகத் திருவுரு வத்தைத்

தரித்த வத் திரத்துடன் தானமாக் கொடுத்து
நைமித் திகம் என நவில்தரு மரபால்

[நைமித்திகம்= முறையாக விசேஷ காலங்களில் செய்யப்படும் விழா]

இம்முறை பூசனை யாவர் செய்தலும்
எண்ணிய கருமம் யாவையு முடிப்பர்

திண்ணிய செருவிற் செயம்மிகப் பெறுவர்
அரன் இவன் தன்னைமுன் அர்ச்சனை பண்ணிப்

[செரு=போர்]

புரமொரு மூன்றும் பொடிபட எரித்தான்
உருத்திரன் இவனை உபாசனை பண்ணி [370]

விருத் திராசுரனை வென்றுகொன் றிட்டான்
அகலிகை இவன்தாள் அர்ச்சனை பண்ணிப்

பகர்தருங் கணவனைப் பரிவுட னடைந்தாள்
தண்ணார் மதிமுகத் தாள் தமயந்தி
[பகர்=ஒளி]

அன்னான் இவனை அர்ச்சனை பண்ணி
நண்ணார் பரவு நளனை அடைந்தாள்

ஐங்கரக் கடவுளை அர்ச்சனை பண்ணி
வெங்கத நிருதரை வேரறக் களைந்து

தசரதன் மைந்தன் சீதையை யடைந்தான்
பகிரத னென்னும் பார்த்திவன் இவனை [380]

மதிதலந் தன்னின் மலர்கொடு அர்ச்சித்து
வரநதி தன்னை வையகத்து அழைத்தான்
[வரநதி=கங்கை]

அட்ட தேவதைகளும் அர்ச்சித்து இவனை
அட்ட போகத்துடன் அமிர்தமும் பெற்றார்

உருக்மணி யென்னும் ஒண்டொடி தன்னைச்
செருக்கொடு வவ்விச் சிசுபா லன்தான்

[ஒண்டொடி= ஒள்+தொடி= ஒளி பொருந்திய கைவளைகளை அணிந்தவள், [வவ்வு=கொள்ளையிடு, கவர்தல்]

கொண்டு போம் அளவிற் குஞ்சர முகனை
வண்டு பாண்மிழற்றா மலர்கொடு அர்ச்சித்துத்

[பாண்=கள்]

தாரியின் மறித்தவன் தனைப்புறங் கண்டு
யாமும் அங்கு அவளை இன்புறப் பெற்றோம் [390]

புகர்முகக் கடவுளைப் பூசனை புரிந்து
மிகமிக மனத்தில் விளைந்தன பெற்றார்

[புகர்முகம்=புள்ளிகள் நிறைந்த முகம் உடைய யானை]

இப்புவி தன்னில் எண்ணிலர் உளரால்
அப்படி நீவிரும் அவனை யர்ச்சித்தால்

எப்பொருள் விரும்பினீர் அப்பொருள் பெறுவீர்
என்றுகன் றெரிந்தோன் எடுத்திவை உரைப்ப

[கன்றெறிந்தோன்= திருமால், 'கன்று குணிலா எறிந்தோய் கழல் போற்றி']

அன்றுமுதல் தருமனும் அனுசரும் இவனைப்
பூசனை புரிந்து கட் புலன் இலான் மைந்தரை

[கட் புலன் இலான்= கண்பார்வை இல்லாத திருதாஷ்டிரன்]

நாசனம் பண்ணி நராதிபர் ஆகிச்
சிந்தையில் நினைத்தவை செகத்தினிற் செயங்கொண்டு [400]...!!!

Thursday, May 1, 2014

ஆலயம் அறிவோம் - பழனி முருகன் கோயில்

முருகனின் அறுபடை வீடுகளில் பழனி முருகன் கோயில் முன்றாவது படை வீடு ஆகும். இந்தக் கோயில் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்றது. 



இந்தத் தலத்தின் மூலவர் நவபாஷானத்தால் ஆனவர். போகர் என்ற சித்தர், இந்தத் தலத்தின் மூலவரை பிரதிஷ்டை செய்துள்ளார். உற்சவர் முத்துகுமாரசாமி. இந்த கோவிலில்தான் தமிழகத்தில் முதன்முதலாக பக்தர்கள் வேண்டுதல்கள் நிமித்தம் அலகு குத்துதல், காவடி எடுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதன் பின்னரே தமிழகத்தின் மற்ற கோயிலில் பக்தர்கள் மத்தியில் கடன்செலுத்தம் பழக்கம் ஏற்பட்டது.

பழனி முருகன் மலைக்கோயில், தரை மட்டத்தில் இருந்து 450 அடி உயரத்தில் உள்ளது. பக்தர்கள் 690 படிகள் கடந்து கோயிலுக்கு செல்ல வேண்டும். பழனிக்கு ஆவினன் குடி, தென்பொதிகை என்ற புராணப் பெயர்களும் உண்டு.

கோயில் வரலாறு:

நாரதர் ஒரு நாள் அரிதாகக் கிடைத்த ஞானப்பழத்தை சிவனுக்கு சாப்பிட கொடுத்தார். அப்போது அருகில் இருந்த பார்வதி, தன்னுடைய மகன்கள் முருகன், விநாயகருக்கு பகிர்ந்து கொடுக்கு விரும்பினார். ஆனால், சிவபெருமானோ பழத்தை பகிர்ந்தால் அதன் தனித்தன்மை போய்விடும் எனக் கூறி, பழத்தை பெற மகன்களுக்கு ஒரு போட்டியை அறிவித்தார். உலகத்தை முதலில் யார் முதலில் சுற்றிவருகிறார்களோ அவர்களுக்கு இந்த ஞானப்பழத்தை வழங்க முடிவு செய்தார். முருகனோ, தன்னுடைய மயில் வாகனத்தை உலகத்தை சுற்றிவர சென்றார். விநாயகரோ, பெற்றோரை உலகமாக நினைத்து அவர்களை சுற்றி வந்து ஞானப்பழத்தை பரிசாக பெற்றார். அதிர்ச்சியடைந்த முருகன் ஏமாற்றத்தை தாங்க முடியாமல் பெற்றோரை விட்டு பிரிந்து பழனி முருகன் கோயிலில் குடிபெயர்ந்தார். அன்றில் இருந்து முருகன் தங்கியிருந்த இந்த படை வீடு, (பழம்+நீ) பழனி என அழைக்கப்படுகிறது.

முக்கிய திருவிழாக்கள்:

பழனி முருகன் கோயில், திருவிழாக்களுக்கு பெயர்பெற்ற ஊராகும். இங்கு ஆண்டுதோறும் தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம் ஆகிய விழாக்கள் விமர்ச்சையாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக தைப்பூசம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகம் முழுவதும் இருந்து இந்தக் கோயிலுக்கு வந்து செல்வதை வரமாக கொண்டுள்ளனர். இந்த கோயிலில் தங்கத் தேர் வழிப்பாடு சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.

நடை திறக்கும் நேரம்:

மலைக்கோயில், பெரியநாயகி கோயில், திருவினன்குடி கோயில் ஆகிய மூன்று கோயில்களும் தினசரி காலை 6 மணியில் இருந்து இரவு 9 மணி வரையில் தொடர்ந்து திறந்து இருக்கும்.

தலச் சிறப்புகள்:

குடும்பத்தில் சந்தோஷம், தொழில் செழிக்க, செல்வம் பெருக இந்த கோயிலில் அதிகளவில் பக்தர்கள் பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றி முருகனை வேண்டிக் கொள்கின்றனர். பொதுவாக குழந்தைகள் தாயிடம் பிறந்து தந்தையிடம் அடைக்கலம் பெறுவார்கள். ஆனால், முருகனோ, தந்தையின் நெற்றிக் கண்ணில் இருந்து உதித்து, தாய் பார்வதியின் அரவணைப்பில் வளர்ந்தார். முருகன் பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வந்து நின்ற தலம் என்பதால் பழனி மலையடிவாரத்தில் உள்ள திருஆவின்குடி தலமே, “மூன்றாம்படை வீடு” என அழைக்கப்படுகிறது. இந்தக் கோயிலில் வழங்கப்படும் பழனி பஞ்சாமிர்தம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. பழனி பஞ்சாமிர்தம் பக்தர்கள் மத்தியில் விஷேச பிரசாதமாக விளங்குகிறது.

சுற்றுலா தலம்:

பழனி முருகன் முதலில், பக்தர்கள் வேண்டுதல்கள் மற்றும் தெய்வ வழிப்பாடுகள் செய்ய வந்து செல்ல ஒரு புன்னியதலமாக விளங்கியது. காலப்போக்கில், பழனி மலைக்கோயிலுக்கு தமிழகத்தின் பிற மாவட்ட சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி வடமாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வர துவங்கியுள்ளனர். சுற்றுலா பயணிகள், மலைக்கோயிலை சுற்றிப் பார்க்க தமிழக அரசு ரோப்கார் (கம்பிவட ஊர்தி) வசதி செய்துள்ளது. சுற்றுலா பயணிகள், பக்தர்கள், பழனி மலையடிவாரத்தில் இருந்து மலை உச்சி பகுதியில் உள்ள முருகன் கோயிலுக்கு செல்ல இந்த ரோப்காரில் சென்று வருகின்றனர்.

தண்டாயுதபானி - பெயர் காரணம்:

இடும்பன் என்பவன், அகத்தியரின் உத்தரபடி சக்திகிரி, சிவகிரி என்ற இரு மலைகளை தென்பொதிகைக்கு எடுத்து சென்றான். வழியில் பாரம் தாங்காமல் பழனி மலையில் இடும்பன் இரு மலைகளையும் கீழே வைத்து விட்டான். அப்போது பழனி மலையில் இருந்த முருகன் கீழே வைத்த சக்திகிரி மலையில் ஏறி நின்றார். இடும்பன், அவரை இறக்ககும்படி எச்சரித்தான். முருகன் அவன் பேச்சை கேட்கவில்லை. ஆத்திரமடைந்த இடும்பன், முருகனை எதிர்க்க துணிந்தான். முருகன், அவனுக்கு தன்னுடைய அருட்பார்வையை செலுத்தி அவனை தன்னுடன் வைத்துக் கொண்டார். சக்திகிரி மலையில் மீது ஏறி நின்றபோது முருகன் தன் கையில் தண்டம் வைத்திருந்ததால் “தண்டாயுதபாணி” என பெயர் பெற்றார்.

பழனி முருகன் கோயில்:

மூலவர் : தண்டாயுதபாணி, நவபாஷாண மூர்த்தி.
தல விருட்சம் : நெல்லி மரம்
தீர்த்தம் : சண்முக நதி
ஆகமம் : சிவாகமம்.
புராணப் பெயர் : திருஆவினன் குடி.
ஊர் : பழனி
மாவட்டம்: திண்டுக்கல்
மாநிலம் : தமிழ்நாடு
முகவரி : அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில், பழனி 624601. திண்டுக்கல் மாவட்டம்.
தொலைபேசி: 04545-242293, 242236, 242493.